மதுரை நகரின் வளர்ச்சி குறித்து இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட பதிவு ஒன்றுக்குப் பதிலளிக்கும் விதமாக, பா.ஜ.க. மூத்த தலைவரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன், தி.மு.க. மற்றும் அதன் தலைவர் மு.க. ஸ்டாலினுக்குச் சரமாரியாகப் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: 'என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி' - டிச.8-ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்குத் தமிழிசை செளந்தரராஜன் தனது எக்ஸ் தளத்தில் பல்வேறு முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளார். இன்று மதுரையில் கட்டிய மேம்பாலங்களைப் பட்டியலிட்டீர்கள். ஆனால், ஐந்து முறை ஆட்சியில் இருந்த நீங்களும் உங்கள் கட்சியும் மதுரைக்கு என்ன பெரிய தொழிற்சாலையை முன் கொண்டு வந்தீர்கள்?
இன்று மெட்ரோ ரயிலுக்குச் சரியான கட்டமைப்பு அறிக்கையைச் சமர்ப்பிக்காமல், நிர்வாக ரீதியாக மறுக்கப்பட்டதை, மத்திய அரசு பாரபட்சமாக மறுக்கிறது என்று சொல்கிறீர்களே? உங்கள் சகோதரரே மதுரையில் அரசியல் செய்தவர், மத்தியில் அமைச்சராக இருந்தார். அப்போது ஏன் மெட்ரோ ரயில் பற்றியும், மதுரை எய்ம்ஸ் பற்றியும் சிந்திக்கவில்லை? நீங்கள் அமைச்சரவையில் இடம் பெற்ற போது உடனே அனுமதி பெற்று இவை எல்லாம் நீங்கள் நிறைவு செய்திருக்கலாமே?
பாசக்கார மதுரை அஞ்சா நெஞ்சர்களினால் அரசியல் செய்யப்பட்டபோது, மதுரை எந்த அளவிற்கு கவனிக்கப்பட்டது என்பது மதுரை மக்களுக்கு நன்றாகத் தெரியும். மத்திய அரசு இளைஞர்களைப் பக்கோடா வைக்கச் சொன்னது என்று அப்பட்டமான பொய் சொல்கிறீர்கள்.
ஆனால், இன்று ஸ்டார்ட் அப் இந்தியா ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டங்களால் உலகிலேயே அதிக தொழில்முனைவோர்கள் இந்தியாவில் தான் இருக்கிறார்கள். குறிப்பாக, முத்ரா வங்கி என்று தொழில் தொடங்கக் கடன் கொடுக்கப்பட்டதில், அதில் தமிழகத்தில் உள்ள பெண்களும், பட்டியலின சகோதர சகோதரிகளும் தான் அதிகம் பலன் அடைந்திருக்கிறார்கள். ஆக, மத்திய அரசுப் பெண்களை உதவி பெறுபவர்களாக இல்லாமல் உதவி தருபவர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது.
குடமுழுக்கு செய்ததை பெருமையாகச் சொல்கிறீர்கள். ஆனால், ஒரு முதலமைச்சர் என்ற வகையில் எத்தனை குடமுழுக்கு விழாக்களில் நீங்கள் கலந்து கொண்டிருக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா? அதே நேரங்களில், இப்தார் விருந்துகளிலும், கிறிஸ்துமஸ் விழாக்களிலும் கலந்து கொண்டிருக்கிறீர்கள். ஆக, வேற்றுமை பார்ப்பது யார் என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும்.
கடற்கரையில் கலைஞருக்குப் பேனா வைக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால், திருப்பரங்குன்றத்தில் உயர்ந்து நிற்கும் விளக்குத் தூணில் நீதிமன்றம் சொன்ன பின்பும் விளக்கேற்றத் துணை நிற்க மறுப்பது எந்த விதத்தில் நியாயம்? உரிமையைத் தட்டிக் கேட்டால் அவர்களை மதவாதிகள் என்று முத்திரை குத்துகிறீர்கள்.
மதுரை வைகை உங்கள் ஆட்சியில் குடிக்கக் கூட முடியாத அளவிற்கு மாசுபட்டு இருப்பதும், அசுத்தமான நகரங்கள் பட்டியலில் மதுரை இடம் பெற்றிருப்பதும் உங்கள் ஆட்சியில் தான். இன்று ராஜாஜி மருத்துவமனையில் 150 கோடி ரூபாயில் சிறப்புச் சிகிச்சைக் கட்டடங்கள் மத்திய அரசின் உதவியினால் கட்டப்பட்டிருக்கின்றன.
தஞ்சை, திருநெல்வேலி மருத்துவமனைகளோடு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிறப்புச் சிகிச்சை பிரிவு பெற்றது என்பதையும் மறந்து விட வேண்டாம். மதுரை மத்திய அரசினால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்க்கப்பட்டு ஏறக்குறைய 1000 கோடி ரூபாய் அதற்காக ஒதுக்கப்பட்டது. உலகத் தரம் வாய்ந்த கல்வியைக் கொடுக்க வேண்டிய மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் எந்த அளவிற்கு மிகவும் நிர்வாகச் சீர்கேடினால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை மக்கள் அறிவார்கள்.
தமிழிசை செளந்தரராஜன், முடிவாக, "தங்களுக்கு மதுரையை வளர்ச்சி அடையச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தைத் திருப்பரங்குன்ற முருகன் ஏற்படுத்தியிருக்கிறான் என்ற வகையில் மகிழ்ச்சி. மதுரை மக்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும் என்று திருப்பரங்குன்றம் வேல் தங்களுக்கு நினைவு படுத்தி இருக்கிறது என்ற வகையில் மகிழ்ச்சி" என்று கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "இந்து விழாக்களுக்கு வாழ்த்து சொல்ல மறுப்பது ஏன்?" - முதலமைச்சருக்கு தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி!