ஆன்லைனில் இலவசமாகத் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களைப் பார்க்கும் மோகத்தில் இருக்கும் பொதுமக்களுக்குத் தமிழ்நாடு இணையவழி குற்றப்பிரிவு மிக முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. அங்கீகாரமற்ற மற்றும் திருட்டுத்தனமாகத் திரைப்படங்களை ஒளிபரப்பும் செயலிகளைப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என்றும், இதன் மூலம் உங்கள் வங்கிப் பணம் மற்றும் அந்தரங்கத் தகவல்கள் திருடப்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
டெலிகிராம், வாட்ஸ்அப் மற்றும் தேர்ட் பார்ட்டி இணையதளங்கள் வழியாகப் பதிவிறக்கம் செய்யப்படும் செயலிகள், உங்கள் மொபைல் போனின் அடிப்படை பாதுகாப்பு அரண்களைச் செயலிழக்கச் செய்கின்றன. இதனால் உங்கள் போனில் உள்ள புகைப்படங்கள், தொடர்புகள் மற்றும் செய்திகள் போன்ற தனிப்பட்ட தகவல்கள் உங்களுக்குத் தெரியாமலேயே திருடப்படுகின்றன.
இவ்வாறு திருடப்படும் தகவல்களைப் பயன்படுத்தி, சைபர் குற்றவாளிகள் 'டிஜிட்டல் கைது' போலி முதலீடு மற்றும் போலி வேலைவாய்ப்பு போன்ற மோசடிகளில் உங்களைச் சிக்க வைக்கின்றனர். குறிப்பாக, வங்கி விபரங்கள் திருடப்பட்டால் மொத்தப் பணத்தையும் இழக்க நேரிடும்.
இதையும் படிங்க: 10-ம் வகுப்பு தோல்வி என ஒரு பெண்ணின் பதிவு கூட இல்லை! அமைச்சர் கீதா ஜீவன் பெருமிதம்!
அங்கீகாரமற்ற செயலிகளைப் பதிவிறக்கம் செய்வது மட்டுமல்லாமல், அதனை மற்றவர்களுக்குப் பகிர்வதும் சட்டவிரோதச் செயலாகும். இத்தகைய செயலிகளைப் பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான சைபர் சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீஸ் எச்சரித்துள்ளது.
மொபைல் செட்டிங்ஸில் 'Install Unknown Apps' என்ற அனுமதியை ஒருபோதும் வழங்க வேண்டாம். 'இலவச OTT', 'சந்தா இல்லாத பிரீமியம்' போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பிப் பாப்-அப் லிங்க்களைக் கிளிக் செய்யாதீர்கள்.
கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகியவற்றில் உள்ள அதிகாரப்பூர்வமான செயலிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஏதேனும் இணையவழி மோசடிகளில் சிக்கினால் அல்லது சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக 1930 என்ற உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "தமிழகத்தை பயங்கரவாதிகளின் கூடாரமாக மாற்றிவிட்டது திமுக!" டிடிவி தினகரன் கண்டனம்!