அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் தினகரன், முத்தரையர் சதய விழாவிற்காக நேற்று திருச்சிக்கு வருகை தந்தார். அந்த விழாவை முடித்துக்கொண்டு ஆட்சியர் அலுவலக சாலையிலுள்ள மாரியாட் நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளார். இன்றும் தங்கி உள்ள அவர் மாலை தொட்டியத்தில் நடைபெறும் பொது கூட்டத்தில் கலந்து கொண்டு பேச உள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அமமுகவினர் தினகரனை வரவேற்று பெரிய பேனர்களை விடுதி முன் வைத்துள்ளனர்.


இதனிடையே நாளை திருச்சியில் நடைபெறவுள்ள இளைஞரணி கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று மாலை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அதே விடுதிக்கு வருகிறார். எனவே உடனடியாக டிடிவி தினகரனின் பேனரை அகற்ற வேண்டும் என திமுகவினர் அமமுகவினரிடம் கூறினர். இதனால் இருவருக்கும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. பின்னர் இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த போலீசார், இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.
இதையும் படிங்க: இந்த முறையும் திமுக ஜெயிக்க இதுதான் வழி... ஆட்சியர் டு அதிகாரிகளுக்கு உதயநிதி அதிரடி உத்தரவு!


பின்னர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர், தங்களுக்கு துணை முதல்வர் நிகழ்ச்சி நாளை இதே விடுதியில் நடைபெறுவது தெரியாது, இன்று காலை தான் குறிப்பிட்டனர். நாங்கள் வைத்துள்ள சதய விழா தொடர்பான பேனரை உடனே அகற்றி விடுகிறோம், மீதமுள்ள பேனரை இரவு அகற்றிவிட உள்ளதாக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தெரிவித்தார். இதையடுத்து ஒரு பேனர் மட்டும் அகற்றி உள்ளனர். மற்றவற்றை இன்று மாலை டிடிவி தினகரன் விடுதியை விட்டு புறப்பட்டு சென்ற பிறகு அகற்றுவதாக தெரிவித்துள்ளனர். இதனால் தற்போது அமைதியான சூழல் நிலவுகிறது.
இதையும் படிங்க: தேர்தல் நேரத்தில் இப்படியா? இளம்பெண்களை இரையாக்க நினைத்த நிர்வாகி.. சாட்டையை சுழற்றிய உதயநிதி..!