தமிழகத்தில் அமையவுள்ள புதிய அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) நேரடியாகப் பங்கேற்க உள்ளதை அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தங்களது சமூக வலைதளப் பதிவுகள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற பல ஆண்டுகாலக் கோரிக்கை தற்போது நனவாகி இருப்பதை அவர்கள் கொண்டாடி வருகின்றனர்.
விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு அவர்கள் தனது எக்ஸ் (X) தளத்தில் விடுத்துள்ள பதிவில் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு! இது திருமா காலம் - இனி உயர்வோம் மேலும் மேலும்! எனப் பதிவிட்டுள்ளார். கடந்த பல ஆண்டுகளாகத் தேர்தல் அரசியலில் அதிகாரப் பகிர்வு குறித்துத் தொடர்ந்து பேசி வந்த விசிக, இப்போது தவெக தலைமையிலான புதிய அரசில் அமைச்சரவையில் இடம்பெறுவதை இந்த முழக்கம் உறுதி செய்கிறது.

விசிக-வின் மற்றுமொரு முக்கியத் தலைவரான சிந்தனைச் செல்வன் அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில் தமிழ்நாடு குழம்பிப் போயிருக்கலாம். எழுச்சித்தமிழர் (திருமாவளவன்) தெளிந்த நீரோடை. உளிகளைக் கொண்டு செதுக்க அவர் வெறும் கல் அல்ல, எழுந்து நிற்கும் இமய மலை. நாளைய பொழுது நமக்காய் விடியும்” எனக் குறிப்பிட்டு, நாளை நடைபெறவுள்ள பதவியேற்பு விழா விளிம்புநிலை மக்களின் அதிகாரத்திற்கான தொடக்கமாக இருக்கும் என அவர் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஆட்சி தவறான பாதைக்கு சென்றால் ஆதரவு வாபஸ்! தவெக-விற்கு விசிக எச்சரிக்கை!
தவெக தலைவர் விஜய் நாளை முதலமைச்சராகப் பதவியேற்க உள்ள நிலையில், அவருக்கு 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கிடைத்துள்ளது. இதில் விசிக-வின் இரண்டு எம்.எல்.ஏ-க்களும் அடக்கம். திருமாவளவன் உள்ளிட்ட இருவர் அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ள தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்தது.
தமிழக வரலாற்றில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு புதிய சக்தி அரியணை ஏறும் வேளையில், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக விசிக அதிகார மையத்தில் அங்கம் வகிக்கப் போவது சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மிக முக்கியமான திருப்பமாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: திருமாவளவனுக்கு துணை முதலமைச்சர் பதவி... திருச்சி கிழக்கில் சீட்டு... விசிகவுக்கு லட்டு மாதிரி ஆஃபரை அள்ளிக் கொடுத்த விஜய்...!