தமிழக வெற்றிக்கழகம் (த.வெ.க.) தலைவர் விஜய்யின் தேர்தல் பிரசாரம் அடிக்கடி ரத்து செய்யப்படுவதற்கு பின்னணியில் துபாய் பாதுகாப்பு நிறுவனத்தின் ஆலோசனை இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த நயீம் மூஸா என்பவர் துபாயில் ‘ஜென்ட்டுர் செக்யூரிட்டி சர்வீசஸ்’ என்ற பாதுகாப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் துபாய், கத்தார், குவைத், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் 200 வகையான பாதுகாப்பு சேவைகளை வழங்குகிறது.
ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் நடிகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் வி.வி.ஐ.பி.க்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் இந்நிறுவனம் பெயர் பெற்றது. இதன் நிர்வாக இயக்குநரான நயீம் மூஸா தற்போது விஜய்யுடன் நெருக்கமாக இருந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இதையும் படிங்க: தவெக வேட்பாளர்களுக்கு ஓரவஞ்சனை காட்டும் விஜய்?! ஒரு கண்ணில் வெண்ணெய்! இன்னொன்றில் சுண்ணாம்பா?!
கட்சி பொதுச்செயலர் ஆனந்த் உள்ளிட்டோர் கூட நயீம் மூஸாவின் அனுமதியுடன் தான் விஜய்யை சந்திக்க முடியும் என்று கூறப்படுகிறது. கேரள சட்டசபை தேர்தலில் ஓட்டு போடுவதற்காக விஜய் ஒருநாள் பிரசாரத்தை ரத்து செய்த அளவுக்கு இவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

த.வெ.க. நிர்வாகிகள் சிலர் தெரிவித்ததாவது: முன்பு விஜய்யுடன் 5 பாதுகாவலர்கள் மட்டுமே இருந்தனர். கரூர் சம்பவத்துக்குப் பிறகு, பிரசார பயணத்தை கண்காணிக்க கூடுதலாக 100 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விஜய் வாகனத்தில் உள்ள கருப்பு உடை அணிந்த மூன்று பேரைத் தவிர, இந்த 100 பேரும் மக்களுடன் கலந்து நின்று கூட்ட நெரிசலை உடனுக்குடன் கண்காணிக்கின்றனர். அவர்களிடம் உள்ள நவீன மொபைல் போன்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் மூலம் பாதுகாப்பு அபாயத்தை மதிப்பீடு செய்து, பிரசாரத்தை தொடரலாம் அல்லது ரத்து செய்யலாம் என்ற முடிவை எடுக்கின்றனர்.
இந்த ரகசிய கண்காணிப்பு முறையால் சமீபத்தில் பல பிரசாரங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், அந்த முடிவு ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோருக்கு பின்னரே தெரியவரும் என்றும் கூறப்படுகிறது. கரூர் சம்பவத்துக்குப் பிறகு இந்த பாதுகாப்பு ஏற்பாட்டுக்கு விஜய் மாதம் பல லட்சம் ரூபாய் செலவு செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள இந்த கட்டத்தில், விஜய்யின் அடிக்கடி ரத்து செய்யப்படும் பிரசாரங்களுக்கு பின்னால் உள்ள இந்த பாதுகாப்பு ஏற்பாடு பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. த.வெ.க.வின் உள் இயக்கம் எப்படி செயல்படுகிறது என்பதை இது வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
இதையும் படிங்க: இன்று பெரம்பூர்! நாளை கடலூர்! 3வது முறையாக ரத்தாகும் விஜய் பிரசாரம்! தவெக நிர்வாகிகள் தவிப்பு!