கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், தமிழகத்தில் திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ராமநாதபுரம், திண்டுக்கல், நாகப்பட்டினம், விருதுநகர், திருப்பூர், கிருஷ்ணகிரி, நீலகிரி ஆகிய 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டன.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பொதுப்பணித் துறை அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் கட்டப்பட்ட இந்த மருத்துவ கல்லூரிகள், தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டப்படவில்லை என்றும் மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், இது சம்பந்தமாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை சேர்ந்த விவசாயி என். ராஜசேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், மத்திய அரசின் 60 சதவீத நிதி பங்களிப்புடன் 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளதால், இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்றும் சிபிஐ உள்ளிட்ட மத்திய புலன் விசாரணை அமைப்புகள் விசாரணை செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியை திரும்பப் பெற்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணையை ரத்து செய்து, தான் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கும்படி சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ விசாரணையை கண்காணிக்க ஓய்வு நீதிபதி அஜய் ரஸ்தோகி வருகை!
இந்த வழக்குத் தலைமைநீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரரான ராஜசேகரன் நேரில் ஆஜராகி, தமிழில் வாதங்களை முன்வைக்கத் துவங்கினார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழி ஆங்கிலம் என்பதால், ஆங்கிலத்தில் வாதாட வேண்டும். அல்லது, வழக்கறிஞர் ஒருவரை நியமித்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும் மனுதாரரிடம், என்ன தொழில் செய்கிறீர்கள்? எவ்வளவு நிலம் உள்ளது? என்ன சாகுபடி செய்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்தமனுதாரர், 10 ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்வதாகக் கூறினார். இதையடுத்து, விவசாயத்தை கவனித்து, நிலத்தைப் பாதுகாக்கும்படி மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கறிஞரை நியமித்துக் கொள்ளும்படி கூறி, வழக்கை அடுத்த வாரத்துக்குத் தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: அங்கு என்ன நடந்தது? கரூர் சம்பவத்தில் காயமடைந்தவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் துருவி துருவி விசாரணை...!