தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்யச் சென்னை வந்துள்ள இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் திரு. ஞானேஷ் குமார், இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழகத் தேர்தல் இயந்திரம் உலகிற்கே முன்மாதிரியாகச் செயல்படும் என்று குறிப்பிட்ட அவர், சமூக ஊடகங்களில் வதந்தி பரப்புவோர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிரடியாகத் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலிச் செய்திகள் மற்றும் வதந்திகள் (Fake News) மிகவும் தீவிரமாகக் கண்காணிக்கப்படும். வதந்தி பரப்புவோர் மீது சற்றும் தயக்கமின்றி மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரித்தார். ஜனநாயகக் கடமையை ஆற்றும் முதியவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குத் தங்களது வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதி உறுதி செய்யப்படும் எனத் தெரிவித்தார். வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக, அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அடிப்படை வசதிகள், வரிசை மேலாண்மை மற்றும் அதிகாரிகளின் பாரபட்சமற்றச் செயல்பாடுகள் உறுதி செய்யப்படும்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மத்தியப் பார்வையாளர்கள் தமிழகத்திற்கு வருகை தந்து கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்வார்கள். இது குறித்த முழு விபரங்களும் பொதுமக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்கப்படும். பணபலம் மற்றும் தூண்டுதல்கள் இல்லாத, வெளிப்படையான மற்றும் நேர்மையான தேர்தலைத் தமிழகத்தில் நடத்தத் தேர்தல் இயந்திரம் உறுதி பூண்டுள்ளது. இந்தத் தேர்தல் இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகிற்கே ஒரு முன்மாதிரியானத் தேர்தலாக அமையும்" என அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது..?? தலைமை தேர்தல் ஆணையர் பரபரப்பு பேட்டி..!!
ஜெய் பாரத், ஜெய் ஹிந்த் என தனது உரையை முடித்தத் தலைமைத் தேர்தல் ஆணையர், தமிழக வாக்காளர்கள் அச்சமின்றித் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றத் தயாராக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: தமிழக தேர்தல் தயார்நிலை... 38 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் தீவிர ஆலோசனை!