நடைபெற்ற தவெக-வின் பிரம்மாண்ட நன்றி தெரிவிப்புக் கூட்டத்தில், "தமிழகத்தில் தவெக ஆட்சி அமைப்பதைத் தடுக்கத் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டுச் சதி செய்தன" என்று முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அதிரடியாகக் குற்றம் சாட்டியிருந்தார். முதல்வர் விஜய்யின் இந்த அதிரடிப் புகாருக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) அதிகாரப்பூர்வ தகவல் தொழில்நுட்ப அணி (IT Wing) தற்பொழுது அனல் பறக்கும் வகையில் மிகக் கடுமையான எதிர்வினையாற்றிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதிமுக ஐடி விங் வெளியிட்டுள்ள அந்த காரசாரமான பதிவில், முதலமைச்சர் விஜய்யின் நிர்வாகத் திறமையின்மை மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து அடுக்கடுக்கான விமரிசனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. "தமிழக முதலமைச்சர் என்ற மிக உயரிய பதவிற்கான பொறுப்பைச் சற்றும் உணராமலும், தன் அரசு செய்யும் எந்தவொரு தவறுக்கும் பொறுப்பேற்க மனமில்லாமலும், மேடையில் வெறும் ஆச்சரியக்குறித்தனமாக விஜய் பேசியுள்ளார்" என்று அதில் சாடப்பட்டுள்ளது. மேலும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைச் சீர் செய்யக் காவல்துறைக்கு அதிகாரிகளை மட்டும் நியமித்துவிட்டால் போதுமா, நிர்வாகம் தானாக நடந்துவிடுமா? இது என்ன புது உருட்டாக இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

தவெக அரசின் வாக்குறுதிகள் மற்றும் குற்றச்சாட்டுகளைக் கடுமையாகச் சாடியுள்ள அதிமுக, "எல்லாத் தோல்விகளுக்கும் முந்தைய ஆட்சிதான் காரணம் என்று சாக்குப்போக்கு சொல்வதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா? முந்தைய ஆட்சியில் நிதி நிலைமை மோசமாக இருப்பதை இப்பதான் புதிதாகக் கண்டுபிடித்தீர்களா?" என்று வினவியுள்ளனர். தொடர்ந்து, தவெக ஆட்சிக்கு வரக்கூடாது என இரு கட்சிகளும் கூட்டுச்சதி, சூழ்ச்சி செய்ததாக விஜய் பேசியதற்குப் பதிலடி கொடுத்துள்ள ஐடி விங், "மேடையில் கத்திப் பேசினால், ‘கத்தி’ பட டயலாக் மாடுலேஷனில் கைதட்டல் வாங்கப் பேசினால் நீங்கள் சொல்லும் பொய் எல்லாம் உண்மையாகிவிடுமா? அப்படிச் சதி நடந்ததாகப் பேசுவதற்கு உங்களிடம் ஏதாவது ஒரு ஆதாரமாவது இருக்கிறதா, அதைக் காட்ட முடியுமா?" என்று சவால் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: விஜய் சாருக்கு தான் முதலில் சொன்னேன் - 'கருப்பு' படத்தின் கதை குறித்து ஆர்.ஜே.பாலாஜி நெகிழ்ச்சி பேட்டி!
மேலும், தவெக மீதான குதிரை பேரக் குற்றச்சாட்டுகளைப் பகிரங்கப்படுத்தியுள்ள அதிமுக, "தவெக-வின் குதிரை பேரத்திற்கு அவர்கள் தரப்பிலேயே அண்மையில் வெளியிட்ட அமமுக எம்எல்ஏ கையெழுத்துப் போடும் வீடியோ ஆதாரமே சாட்சியாக இருக்கிறது. மேடையில் வாய்கிழியப் பேசும் மானஸ்தரான விஜய், அதிமுக எம்எல்ஏக்களைத் தனது அதிகார வலைவீசி, விலைபேசித் தங்கள் பக்கம் இழுத்தது பற்றி மட்டும் ஏன் தனது திருச்சி கூட்டத்தில் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை?" என்று அனலைக் கூட்டியுள்ளனர். இறுதியாக, "மக்களை ஏமாற்றுவதிலும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதிலும்தான் தற்பொழுது போட்டி நடக்கிறது; அதில் நீங்கள் திமுகவையே விஞ்சிவிடுவீர்கள் போலிருக்கிறது. உலகமே உங்களைச் சுற்றி மட்டும்தான் இயங்குவது போலச் சும்மா நசநசவென்று புலம்பிக் கொண்டிருக்காதீர்கள் விஜய்" என்று அதிமுக ஐடி விங் தங்களது பதிவில் மிகக் காட்டமாக முடித்துள்ளது. திருச்சி கூட்டத்திற்குப் பிறகு தவெக மற்றும் அதிமுக இடையே ஏற்பட்டுள்ள இந்த நேரடி டிஜிட்டல் வார்த்தைப் போர், தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: விஷாலுக்கும் சேர்த்து வேலை பார்ப்பேன்: தளபதி பெயரை காப்பாற்றுவோம் என அமைச்சர் ராஜ்மோகன் உறுதி!