திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயிலில் பேரறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி நடைபெற்ற, சபாநாயகர் அப்பாவு பங்கேற்ற அன்னதானத்தில் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்களுக்கு பங்கேற்கவோ, கோயிலுக்குள் நுழையவோ அனுமதி மறுக்கப்பட்டதாக வரும் தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என அதிமுக தெரிவித்துள்ளது.
சமநிலை சமுதாயம் காண இயக்கம் கண்ட பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளில், அவர் ஆரம்பித்த கட்சியை கபளீகரம் செய்துகொண்டிருக்கும் ஒரு குடும்பம் நடத்தும் ஆட்சியில், பட்டவர்த்தனமாக தீண்டாமை கடைபிடிக்கப் படுவது என்பது கேவலமான செயல் என்றும் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆலய நுழைவுப் போராட்டத்தை நடத்திக் காட்டிய திராவிட நிலத்தில், கோயிலுக்குள் நுழையவிடாமல் பட்டியல் சமூக சிறுவர்களை "தீட்டு" பார்த்திருப்பது தான் திமுக மாடலா என்ற கேள்வி எழுப்பிய அதிமுக, இதை நாங்கள் சொல்லக் கூட வெட்கமாக இருக்கிறதே என்றும் செய்திருக்கும் இந்த விடியா அரசுக்கு சிறிதளவு கூட கூச்சமில்லையா எனவும் சரமாரி கேள்விகளை முன் வைத்துள்ளது. மேலும், சிறுவர்களை மிரட்டி அனுப்பியிருப்பதாக சிறுமி வேதனையோடு தெரிவிக்கும் காணொளி காணவே கண் கலங்குகிறது என்றும் இதெல்லாம் நவீன தீண்டாமையின் உச்சபட்சக் கொடூரம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எங்கப்பா அந்த தடையற்ற மின்சாரம்? சொன்னீங்களே... செஞ்சீங்களா? நயினார் விளாசல்..!
பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவரை சபாநாயகர் இருக்கையில் அமரவைத்து, முதல்வர் உட்பட அனைவரும் மரியாதை செலுத்தி அழகு பார்த்த இயக்கம் அதிமுக என்றும் ஆனால், திமுக ஆட்சியிலோ, அதுவும், பேரவைத் தலைவர் அப்பாவு இருக்கும் ஒரு சபையில், இப்படிப்பட்ட ஒரு சமூக அவலம் நடந்திருப்பதற்கு என்ன விளக்கம் தரப்போகிறார்கள் பொம்மை முதல்வரும், சபாநாயகரும் என கேட்கப்பட்டுள்ளது.
ஏழை எளிய குழந்தைகளை, ஜாதியின் பெயரால், அடிப்படை உணவை கூட மறுத்து, அவர்களை கண்ணீரில் ஆழ்த்தியது தான் திமுக பேசும் சமூகநீதி, சமத்துவமா., இதை விட திமுக-வால் அண்ணாவை இழிவு படுத்த முடியுமா என்றும் வெட்கக்கேடான இந்த செயலுக்கு முதல்வரும் சபாநாயகரும் பகிரங்க மன்னிப்பு உடனடியாக கோர வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
இதையும் படிங்க: "அப்பா" அடைமொழிக்கு மட்டும் ஆசை..! அக்கிரமம் நடக்குது... அன்பில் எங்க போனீங்க? நயினார் சரமாரி கேள்வி..!