சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித் குமார். விருதுநகரைச் சேர்ந்த பேராசிரியையான நிகிதா என்பவர், தனது காரில் வைத்திருந்த 10 சவரன் நகைகள் காணாமல் போனதாகவும், அஜித் குமார் மீது சந்தேகம் இருப்பதாகவும் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், அஜித் குமார் மற்றும் அவரது சகோதரர் நவீன் குமார், ஆட்டோ ஓட்டுநர் அருண் குமார் உள்ளிட்டோர் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விசாரணையின்போது, மானாமதுரை குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் அஜித் குமாரை மடப்புரம் கோவிலின் பின்புறத்தில் உள்ள மாட்டுத் தொழுவத்தில் கொடூரமாகத் தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதன் விளைவாக, அஜித் குமார் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனையில், அவரது உடலில் 50 இடங்களில் காயங்கள் இருந்ததும், மூளை மற்றும் கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகளில் ரத்தக் கசிவு ஏற்பட்டிருந்ததும் உறுதியானது. இந்தச் சம்பவம் காவல் மரணமாக பதிவு செய்யப்பட்டு, வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.
இதையும் படிங்க: அஜித் கஸ்டடி மரணம்.. வீரியமெடுக்கும் சிபிஐ விசாரணை! மருத்துவமனையில் முகாமிட்ட அதிகாரிகள்..!
இந்த நிலையில், நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா என்பவரை அழைத்து இதுவரை விசாரிக்கவில்லை என்றும் அவர் யாருக்கு போன் செய்து புகார் தெரிவித்தார், தனிப்படை விரைந்து வந்தனர் என்ற கேள்விகள் எழுந்தது. அதுமட்டுமல்லாமல் நிகிதா மீது ஏற்கனவே பண மோசடி உள்ளிட்ட வழக்குகள் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
நிகிதாவிடம் விசாரிக்கவில்லை என்று தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று நிகிதா மற்றும் அவரது தாயார் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி உள்ளனர். அவர்களிடம் நகை திருட்டு தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: உயிரிழந்த அஜித் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இடைக்கால இழப்பீடு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!