தமிழ்நாடு முழுவதும் ஏழை எளிய மக்களின் பசியை போக்கி வரும் புகழ்பெற்ற அம்மா உணவகங்கள் புதிய உற்சாகத்துடன் மறுசீரமைக்கப்பட உள்ளன. முதலமைச்சர் விஜய், சமீபகாலமாக உணவின் தரம் மற்றும் சுவை குறித்து வந்த புகார்களை தீவிரமாகக் கருத்தில் கொண்டு, மாநிலம் முழுக்க இயங்கும் 600க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்களை நவீனமயமாக்க உத்தரவிட்டுள்ளார். சென்னை உட்பட அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளிலும் இந்த மேம்பாட்டுப் பணிகள் விரைவில் தொடங்கும்.
2013ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களால் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், அதிமுகவின் தேர்தல் வாக்குறுதியில் இடம்பெறாத புதுமையான நலத்திட்டமாக அமைந்தது. ஒரு ரூபாய்க்கு இட்லி, ஐந்து ரூபாய்க்கு சாம்பார் சாதம், மூன்று ரூபாய்க்கு தயிர் சாதம் என மிகக் குறைந்த விலையில் சத்தான உணவை வழங்கி, நகர்ப்புற ஏழைகள், தினக்கூலி தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக இருந்து வருகிறது.

இந்த மாடல் தமிழ்நாட்டின் வெற்றிகரமான சமூக நலத் திட்டமாக மட்டுமல்லாமல், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் உதாரணமாக விளங்கியது. 2021ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி இந்த உணவகங்கள் தொடர்ந்து இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. பெருமழை, வெள்ளம், கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் மக்களுக்கு இலவச உணவு வழங்கி, அவர்களின் உயிர் காக்கும் முதன்மைப் புகலிடமாகவும் இந்த உணவகங்கள் செயல்பட்டுள்ளன.
இதையும் படிங்க: கடும் GAS பிரச்சனை..! அம்மா உணவகங்களில் இட்லி, சப்பாத்தி நிறுத்தம்..! முக்கிய அறிவிப்பு..!
தற்போது சென்னை மாநகராட்சி எல்லையில் 383 உணவகங்களும், பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 237 உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன. இவை தினசரி பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மலிவு விலை உணவு அளித்து வருகின்றன. எனினும், சமீப காலமாக சில இடங்களில் உள்கட்டமைப்பு பற்றாக்குறை, பழைய சமையல் உபகரணங்கள் மற்றும் உணவின் தரம், சுவை குறித்த புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் விஜய், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

உணவகங்களின் கட்டிடங்கள், சமையலறை வசதிகள், இருக்கைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும், தேவையான புதிய சமையல் பாத்திரங்கள் மற்றும் உபகரணங்களை உடனடியாக கொள்முதல் செய்யவும் அறிவுறுத்தியுள்ளார். மேலும், சுவையான, சத்தான மற்றும் தரமான உணவு வகைகளை தங்கு தடையின்றி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த மறுசீரமைப்புப் பணிகளுக்கான செலவுகள் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் பொது நிதியிலிருந்து ஏற்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் அம்மா உணவகங்கள் மீண்டும் மக்களின் முழு நம்பிக்கையைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏழை மக்களின் உணவு உரிமையை உறுதி செய்யும் இந்த திட்டத்தின் வெற்றி, தமிழ்நாட்டின் சமூக நீதி பயணத்திற்கு மேலும் வலுசேர்க்கும்.
இதையும் படிங்க: கடும் GAS பிரச்சனை..! அம்மா உணவகங்களில் இட்லி, சப்பாத்தி நிறுத்தம்..! முக்கிய அறிவிப்பு..!