பெரியபாளையம் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்து 17 பேர் உயிரிழந்துள்ள நிலையில், வாயு கசிவு நிறுத்தப்பட்டு மீதமுள்ள அமோனியா வாயு சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் பத்திரமாக அகற்றப்படும் என திருவள்ளூர் ஆட்சியர் கவிதா தெரிவித்துள்ளார். இதற்காக தொழிற்சாலையை ஒட்டி 500 மீட்டர் தடை செய்யப்பட்ட பகுதியாகவும் அறிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேர் பகுதியில் கடந்த 21-ஆம் தேதி கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிந்து 83 வடமாநில தொழிலாளர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், 17 பேர் உயிரிழந்தனர். தற்போது ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு இளம் பெண்ணும் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக ஆலையின் உரிமையாளர்கள், மேனேஜர், ஆட்களை வேலைககு அழைத்து வந்த ஏஜென்ட் என 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள கடல் உணவு மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, 600 டன் கடல் உணவுகள் 10 நாட்களாக கண்டெய்னர்களில் வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டன. விபத்து ஏற்பட்ட இடத்தில் உள்ள மீதமுள்ள 2 டன் அமோனியாவை பாதுகாப்பாக டேங்கர் லாரி மூலம் வெளியேற்றும் நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இதையும் படிங்க: நிற்காத மரண ஓலம்... அமோனியா வாயு கசிவால் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு...!
4, 5 தேதிகளான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்களில் தொழிற்சாலையிலிருந்து பாதுகாப்பான முறையில் அமோனியா வாயு அகற்றும் நடவடிக்கை தொழில்நுட்ப வல்லுநர் குழுவின் மூலம் மேற்கொள்ளப்பட திட்டமிடப்பட்டுள்ளதாகவும், தொழிற்சாலையில் இருந்து 500 மீட்டர் சுற்றளவு பகுதிகள் தடைச்செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுவதாகவும் மாவட்ட ஆட்சியர் கவிதா அறிவித்துள்ளார்.
முன்னதாக வெள்ளிக்கிழைமை மாலை 6 மணிக்குள் தொழிற்சாலையொட்டி 300 மீட்டர் சுற்றளவில் உள்ள தனியார் தொழிற்சாலைகள், கடைகள், பள்ளிகள் மற்றும் இதர குடியிருப்புகளில் உள்ள பொது மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்படுவார்கள் எனவும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்களில்
சென்னை - பெரியபாளையம் நெடுஞ்சாலையில் தடை செய்யப்பட்ட பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு வாகனங்கள் மாற்றுப்பாதைகளில் செல்ல காவல்துறையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளில் காவல்துறை, வருவாய்துறை, தீயணைப்பு (ம) மீட்புத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மருத்துவக் குழு, தொழிலகப் பாதுகாப்பு (ம) சுகாதார இயக்ககம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கிணைத்து பணிகள் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் கன்னிக்கைபேர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதாகவும், பொது மக்களுக்கு ஏற்படும் அவசர கால உதவிக்கு கட்டுப்பாட்டு அறை 9952590412 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் ஆட்சியர் கவிதா தெரிவித்துள்ளார். அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டால் பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளையும் அவர் தெரிவித்துள்ளார்.
பொது மக்கள் பதற்றமடைய வேண்டாம், அமைதியாக இருந்து பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றவும், காற்று வீசும் திசைக்கு எதிரான (Upwind) பகுதியில் உடனடியாகச் சென்று அங்கு பாதுகாப்பாக இருக்கவும், அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டால் ஈரமான துணியால் மூக்கு மற்றும் வாயை மூடிக்கொள்ளவும், வாயு பரவியுள்ள பகுதியிலிருந்து வெளியேற காற்று வீசும் திசைக்கு குறுக்காக (Crosswind) நடந்து செல்லவும், அதன் பிறகு காற்று வீசும் திசைக்கு எதிரான (Upwind) பகுதியில் சென்று பாதுகாப்பாக இருக்கவும், அவசரநிலை ஏற்பட்டால், உடனடியாக கட்டுப்பாட்டு மையத்தை (Control Centre) தொடர்பு கொள்ளவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். தொழிற்சாலையில் இருந்து அமோனியா வாயு வெளியேற்ற திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்திற்கு பொது மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் கவிதா கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: அமோனியா கசிவு விபத்து: உயிரிழப்பு 9ஆக அதிகரிப்பு..!! 60 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!!