காஞ்சிபுரம் மாவட்டம், திம்மசமுத்திரம் பகுதியில் அஸ்வினி என்ற பெண், வீட்டில் தனியாக இருந்தபோது, கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களால் சரமாரியாக தாக்கப்பட்டார். இச்சம்பவம் பட்டப்பகலில் நடந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அஸ்வினி, தனது இரு குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தாக்குதலின்போது, 8 சவரன் நகை மற்றும் 75,000 ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. தாக்குதலால் படுகாயமடைந்த அஸ்வினி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தேடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தரவேண்டிய நிதியை வழங்க ரெடியா? பிரதமர் கிட்ட பதில் இருக்கா? திமுக சரமாரி கேள்வி
இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, குற்றம் நடந்த நான்கு நாட்கள் ஆகியும் இதுவரை குற்றவாளி கைது செய்யப்படவில்லை என்பது வெட்கக்கேடானது என்று தெரிவித்தார்

சாலையில் பெண்கள் தனியாக நடந்து செல்லவே அச்சப்படும் சூழலில் தமிழகம் தற்போது இருக்கிறது என்பது வெட்கக்கேடு என்றும் திமுக அரசு, குற்றம் நடைபெறாமல் தடுப்பதில்லை, குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்வதுமில்லை எனவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு, திமுக அரசின் மெத்தனப்போக்கே முக்கியக் காரணம் என அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். கொலை செய்யப்பட்ட பெண் வசித்து வந்த அரசு ஓட்டுநர்களுக்கான குடியிருப்புப் பகுதியின் முன்பாக, டாஸ்மாக் மதுபானக்கடை வைத்து, யாருக்கு என்ன நேர்ந்தாலும், சாராய விற்பனை மூலம் கிடைக்கும் வருமானமே முக்கியம் என்ற ரீதியில் திமுக அரசு செயல்பட்டு கொண்டிருப்பதாக தெரிவித்த அண்ணாமலை, குடியிருப்புப் பகுதிகளின் அருகில் எதற்கு திமுக அரசு மதுபானக் கடைகளை நடத்துகிறது என்ற கேள்வியை முன்வைத்தார்.
உங்கள் கட்சிகாரர்களின் வருமானத்துக்குப் பொதுமக்கள் உயிர்பலி கொடுக்க வேண்டுமா எனக் கேட்ட அண்ணாமலை, உடனடியாக, இந்தக் குற்றத்தில் தொடர்புடைய அனைவரும் கண்டறியப்பட்டு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், தமிழகத்தில், குடியிருப்புப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: விலைமதிப்பில்லா உயிர்களை காக்க மனசு வரலையா? கடல் அரிப்பு நிகழ்வை சுட்டிக்காட்டி சீமான் விளாசல்