தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, தனது புதிய அரசியல் இயக்கமான “We The Leaders” மூலம் வேகமாக ஆதரவை திரட்டி வருகிறார். பாஜக தலைமை அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, புதிய பாதை, புதிய இயக்கம் மற்றும் புதிய பார்வையுடன் மக்களுக்காக செயல்பட விரும்புவதாக அறிவித்திருந்த அண்ணாமலை, ஜூன் 5-ஆம் தேதி தனது புதிய இயக்கத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார்.
புதிய இயக்கம் தொடங்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே உறுப்பினர் சேர்க்கை மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நேற்று மதியம் 2.30 மணி நிலவரப்படி 13 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்திருந்த நிலையில், தற்போது உறுப்பினர் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
புதிய இயக்கத்தின் வளர்ச்சி குறித்து சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்ட அண்ணாமலை, கடந்த 24 மணி நேரத்தில் கிடைத்த ஆதரவு தன்னை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், இந்த ஆதரவு தனக்கு மிகப்பெரிய பொறுப்பையும் அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தமிழக அரசியலில் புதிய போட்டிக் களம்..!! விஜய் ஆட்சியும், அண்ணாமலையின் புதிய அரசியல் பயணமும்..!!

மேலும், இந்த இயக்கம் ஒரே ஒருவரின் பயணம் அல்ல என்றும், நல்ல மாற்றத்தை விரும்பும் மக்களின் கூட்டு முயற்சியாக இது உருவாகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மாற்றம் வேண்டும் என்று நம்பும் ஒவ்வொரு குடிமகனின் எதிர்பார்ப்பும், உறுப்பினர் சேர்க்கையில் பிரதிபலிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை மதித்து, நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் செயல்படுவோம் என்றும், தமிழகத்தின் சிறந்த எதிர்காலத்திற்காக இந்தப் பயணத்தில் அனைவரும் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டும் என்றும் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார்.
இதற்கிடையில், அடுத்த பொதுத்தேர்தலில் தனது இயக்கம் போட்டியிடும் என்றும், அரசியல் களத்தில் மாற்று சக்தியாக உருவாகும் நோக்கத்துடன் செயல்படப் போவதாகவும் அவர் ஏற்கனவே அறிவித்திருந்தார். புதிய இயக்கம் குறுகிய காலத்திலேயே லட்சக்கணக்கான உறுப்பினர்களை ஈர்த்திருப்பது, தமிழக அரசியலில் அடுத்த கட்ட மாற்றங்கள் குறித்து பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: எழுச்சிக் காணும் புதிய இயக்கம்... 13 லட்சத்தை கடந்த உறுப்பினர் சேர்க்கை..! நன்றி கூறிய அண்ணாமலை..!!