தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் நாளுக்கு நாள் அனல் பறந்து வரும் வேளையில், சசிகலா அவர்கள் இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து மிக முக்கியமான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

எங்களுடைய தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்கள் வழியைப் பின்பற்றி, புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பாதையில் நானும் பயணிக்கிறேன். ஒரு பெரிய காரியத்தைத் தொடங்கும் முன், எங்கள் தலைவர்களிடம் ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என்பதற்காகவே இன்று இங்கு வந்து வேண்டிக்கொண்டேன் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப் பின் தமிழகத்தை ஆளப்போகும் ஒரே சக்தி விஜய் தான்!" பெரம்பூரில் தவெக அதிரடி!
பிப்ரவரி 24 (நாளை) மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளாகும். நாளை பசும்பொன்னில் நடைபெறும் அம்மா பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன். அங்குச் சில முக்கிய முடிவுகளை எடுக்கிறோம். நாளை ஒரு நல்ல தகவலை அங்கிருந்து உங்களுக்குச் சொல்வேன் என தேர்தல் குறித்த ரகசியத்தை உடைக்காமல் சஸ்பென்ஸ் வைத்தார்.

அம்மாவின் ஆட்சியைப் பற்றி மக்கள் இப்போதும் பேசுகிறார்கள். அண்ணா மற்றும் தலைவரின் எண்ணங்கள் இன்றும் மக்களிடம் இருக்கின்றன. எல்லார் மனதிலும் அவர்கள் நீங்காமல் இருக்கிறார்கள். அவர்களின் இடத்திலிருந்து நான் வேண்டிக்கொண்டு நாளை அறிவிப்புகளை வெளியிடுவேன் என்றார்.
ஏற்கனவே ஆதரவாளர்களிடம் விருப்ப மனுக்களைப் பெற்று வரும் சசிகலா, வரும் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியா அல்லது கூட்டணியா என்பது குறித்த இறுதிக்கட்ட முடிவை நாளை பசும்பொன்னில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதாவின் பிறந்தநாளில் சசிகலா வெளியிடப் போகும் அந்த நல்ல தகவல் அதிமுக வட்டாரத்திலும், தமிழக அரசியலிலும் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாத்தவர் ஜெயலலிதா - மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நெகிழ்ச்சி!