தரங்கம்பாடி அருகே மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலைதடுமாறி மின் கம்பத்தில் மோதி கல்லூரி மாணவன் உட்பட 2 பேர் பலி- ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா வெள்ளக்கோயில் மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் கவியரசன்.21. மீனவர் அதே கிராமத்தை சேர்ந்த ராகுல்.21 முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர் மற்றும் விஷ்வா.20. ஆகிய மூவரும் கவியரசனின் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக தரங்கம்பாடியில் இருந்து ஊருக்கு திரும்பி வந்துள்ளனர். அப்போது குட்டியாண்டியூர் மெயின் ரோட்டில் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியதில் மூவரும் பலத்த காயம் அடைந்தனர்.
அதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உயிருக்கு போராடிய ராகுல் விஷ்வா ஆகிய இருவரை மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே விஷ்வா இறந்ததால் அவரது உடலை உறவினர்கள் வீட்டிற்கு எடுத்து சென்றனர்.
இதையும் படிங்க: ராமநாதபுரத்தில் நொடிப்பொழுதில் நடந்த பயங்கரம்... ஒரே குடும்பத்தில் துடிதுடித்து பறிபோன 3 உயிர்கள்...!
ராகுல் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே கவியரசன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த பொறையார் போலீசார் வீட்டிலிருந்த விஷ்வாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் கிராமத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நின்றிருந்த லாரி மீது மோதிய வேன்... உடல் சிதைந்து தம்பதி துடிதுடித்து பலி... 13 பேருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை...!