ஒரேநாளில் ஒரே ஒரு கையெழுத்தின் மூலம் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கைக் கொண்டுவந்துவிட முடியும் என்றாலும், அதனால் எழும் கடுமையான சமூக மற்றும் மருத்துவ ரீதியான சிக்கல்களைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தமிழ்நாடு சட்டப்பேரவையில் விளக்கமளித்துள்ளார்.
சட்டமன்ற கூட்டத்தொடரில் மதுவிலக்கு கொள்கை மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் தொடர்பான விவாதத்தின்போது பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, வாரத்தில் ஒருநாள் நண்பர்களுடன் பொழுதுபோக்கிற்காகக் குடிப்பது என்றுதான் பலரும் மதுப்பழக்கத்தைத் தொடங்குகிறார்கள். ஆனால், நாளடைவில் அவர்கள் மீள முடியாத குடிநோயாளிகளாக மாறிவிடுகிறார்கள் என்பதுதான் கள நிலவரம். நாம் அறியாமலேயே இந்த சமூகத்தில் அதிக அளவிலான குடிநோயாளிகளை உருவாக்கியிருக்கிறோம் என்று வேதனையுடன் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து மனித உடலியல் ரீதியான தாக்கங்கள் குறித்துப் பேசிய அவர், குடிநோயாளிகளாக மாறியுள்ள சிலருக்குக் காலையில் கடையைப் பார்த்தவுடனேயே குடிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகிறது; அல்லது மாலை 5 மணி ஆனதும் கண்டிப்பாக மது அருந்தியே தீர வேண்டும் என்ற நிலைக்கு அவர்களின் உடல் தள்ளப்படுகிறது. இது ஒரு தீவிரமான மருத்துவப் பிரச்சினை. பிற மாநிலங்களை விடத் தமிழ்நாட்டில் குடிநோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. எனவே, அவர்களைப் படிப்படியாக மீட்டெடுக்க வலுவான மறுவாழ்வு மையங்களை உருவாக்குவதே உடனடித் தேவையாகும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தேசிய விளையாட்டு தினம் இன்று..!! முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து..!!
மேலும், மறுவாழ்வு மையங்களை ஒரே இரவில் அவசர அவசரமாக உருவாக்கிவிட முடியாது. அதற்குப் போதிய அளவிலான பிரத்யேக மருத்துவர்கள், மனநல ஆலோசகர்கள் மற்றும் உளவியல் நிபுணர்கள் அவசியம். எய்ட்ஸ் நோய் அச்சுறுத்தல் ஏற்பட்ட காலகட்டத்தில் நாம் முன்னெடுத்த மிகப்பெரிய விழிப்புணர்வுப் பிரச்சாரங்களைப் போன்று, மதுவின் தீமைகளுக்கு எதிராகவும் மாபெரும் விழிப்புணர்வுப் பிரச்சார கட்டமைப்பு தீவிரமாக உருவாக்கப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் அதன் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை அனைவரும் களத்தில் காண்பீர்கள் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது உரையில் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: மக்களுக்கு தரமான ரேஷன் அரிசி வழங்குவதே இலக்கு.. இதில் CM விஜய் உறுதி - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!!