மழை நீரை சேமிக்கும் வகையில் 159.08 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குளங்கள் புனரமைப்பு மற்றும் மழை நீர் உறிஞ்சும் பூங்காக்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சியில் பருவமழையினை முன்னிட்டு ஆறுகள், நீர்வழிக் கால்வாய்களில் தூர்வாரி அதன் கட்டமைப்புகளை மேம்படுத்துதல், மழைநீர் வடிகால்வாய் அமைத்தல், அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்வாய்களில் தூர் வாரும் பணி மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சென்னை மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பெய்கின்ற மழையால் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்குவதைத் தடுத்து, மழை நீரைச் சேமித்திடும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில், ஜெர்மன் தொழில்நுட்பத்தில் விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அதன் கொள்ளளவை அதிகரிக்கும் பணிகளையும் மக்கள் பயன்படுத்தும் வகையில் குளத்தினைச் சுற்றி மேம்பாட்டுப் பணிகளையும் மேற்கொள்ளுதல், பூங்காக்களில் மழைநீர் உறிஞ்சும் பூங்கா கட்டமைப்புகளை உருவாக்குதல், புதிதாக குளங்களை அமைத்தல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நல்லா பாருங்க கை கட்டி இருக்குதா? மழைநீர் வடிகால் தொட்டியில் கிடந்த பெண் சடலம்! சந்தேகத்தை கிளப்பிய அண்ணாமலை
பெருநகர சென்னை மாநகராட்சியில் 210 குளங்கள் இருந்த நிலையில் தற்போது, கடந்த நான்கு ஆண்டுகளில் மேலும் 41 குளங்கள் என மொத்தம் 251 குளங்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் இதில் கடந்த நான்கு ஆண்டுகளில் 70 குளங்களில் ரூபாய் 144.34 கோடி மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், இது தவிர ரூபாய் 14.74 கோடி மதிப்பீட்டில் பூங்காக்களில் தேங்கும் மழைநீரை முழுமையாகச் சேகரித்து சேமித்திடும் வகையில் 88 மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள் அமைத்திடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.
மேலும் இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை சார்பில் தென் சென்னை பகுதியில் 22 குளங்களில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் தொடங்கி நடைப்பெற்று வருவதாகவும், தற்போது, மேலும் 44 குளங்களில் ரூபாய் 119.32 மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: என்னப்பா நிலவரம்? ஜெர்மனியில் இருந்தவாறு சென்னை மழை குறித்து கேட்டறிந்த முதல்வர்