சென்னை அருகே கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நொளம்பூரில் முன்பகை காரணமாக சஞ்சய் என்பவரை வீடு புகுந்து 8 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இதில் முக்கிய குற்றவாளியான 'ரூபேஷ்' என்பவரைத் தப்பியோட முயன்றபோது, நொளம்பூர் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். கொலையில் தொடர்புடைய மற்ற 8 பேரும் கைது செய்யப்பட்டனர்.
சென்னை நொளம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகதாஸ். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு சஞ்சய் மற்றும் சரத்குமார் என இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வந்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று இரவு முருகதாஸ், அவரது மனைவி மற்றும் இரு மகன்களும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, சுமார் 11 மணி அளவில் திடீரென எட்டு பேர் கொண்ட ரவுடி கும்பல் வீட்டுக்குள் புகுந்து, முருகதாஸ், சஞ்சய் மற்றும் சரத்குமார் ஆகியோரை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது.
மூவரின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த செல்வி, தனது கணவர் மற்றும் இரு மகன்களும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மூவரும் மீட்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், சஞ்சய் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் முருகதாஸ் மற்றும் சரத்குமார் ஆகிய இருவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நொளம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மதுரவாயலைச் சேர்ந்த ரவுடி கார்த்திக்கின் சகோதரர் உதயாவை சஞ்சய் தாக்கியதாகவும், அதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே இந்த தாக்குதல் நடைபெற்றதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், சம்பவத்துக்கு முந்தைய இரவு சஞ்சய் தண்ணீர் கேன் எடுத்து வரும்போது, கார்த்திக் மற்றும் அவரது கூட்டாளிகள் அவரிடம் தகராறில் ஈடுபட்டதாகவும், பின்னர் சஞ்சய் வீட்டுக்குச் சென்றதும், அவரை பின்தொடர்ந்து வந்த கார்த்திக் தலைமையிலான எட்டு பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் புகுந்து சஞ்சய் உள்ளிட்ட மூவரையும் சரமாரியாக வெட்டியதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ரூபேஷ் என்பவர், மதுரவாயல் பகுதியில் 'சி' வகை ரவுடியாக செயல்பட்டு வந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. ரூபேஷை கைது செய்ய போலீசார் சென்றபோது, அவர் காவலர்களை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து தற்காப்புக்காக போலீசார் அவரது கால்முட்டியில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய மொத்தம் எட்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ரூபேஷ் மட்டும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த கொலை சம்பவம் முன்விரோதம் காரணமாக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கில் முக்கிய ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.