முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூலை 21ம் தேதி காலை நடைபயிற்சியின் போது ஏற்பட்ட லேசான தலைசுற்றல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்களின் அறிவுறுத்தலின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனைகளுடன், 3 நாட்கள் தொடர்ந்து ஓய்வில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகனும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், மகள் செந்தாமரை சபரீசன் ஆகியோர் உள்ளனர். பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோரும் முதல்வர் ஸ்டாலினின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர். அமைச்சர்கள் துரைமுருகன், மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் நேரில் சென்று முதலமைச்சரின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் ஆலை.. ஜூலை 31ம் தேதி திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!!
மேலும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் முதலமைச்சர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகத் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோரும் முதலமைச்சரை செல்போனில் தொடர்புகொண்டு நலம் விசாரித்ததோடு, விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்வதாக தெரிவித்தனர்.
இந்த சூழலில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்தபடியே அலுவலகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார் முதல்வர் மு.க ஸ்டாலின். மூன்றாவது நாளாக இன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போதிலும் முதலமைச்சர், ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் காணொலி மூலம் மக்களுடன் கலந்துரையாடினார்.

காணொளி வாயிலாக, மக்களின் கோரிக்கைகள் மற்றும் மனுக்கள் குறித்து விவரங்களை கேட்டறிந்து, அவற்றுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். மேலும், கன்னியாகுமரி, கோவை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்களுடன் இத்திட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் மருத்துவமனையில் இருந்தபடியே உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்ததோடு; அரசுக் கோப்புகளிலும் கையெழுத்திட்டதாக தெரிவித்துள்ள முதல்வர் மு.க ஸ்டாலின், மருத்துவர்கள் அறிவுறுத்திய ஓய்வுக்குப் பிறகு, விரைவில் உங்களைச் சந்திக்க உங்கள் மாவட்டங்களுக்கு வருவேன் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து.. நிவாரணம் அறிவித்தார் முதல்வர் மு.க ஸ்டாலின்..!