தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம், கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளுநர்கள் பதவி மாற்றங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. மேற்கு வங்காள ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ், திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.
கடந்த 2022 நவம்பர் மாதம் பதவியேற்ற அவர், சுமார் மூன்றரை ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், மார்ச் 5, 2026 அன்று டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார். "பதவியில் போதுமான காலம் பணியாற்றிவிட்டேன்" என அவர் தெரிவித்தார். இந்த ராஜினாமா, தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஏற்பட்டிருப்பதால், அரசியல் காரணங்கள் இருக்கலாம் என ஊகங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், அவருக்கு பதிலாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மேற்கு வங்காள ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பதிவில் முதலில் உறுதிப்படுத்தினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மம்தா பானர்ஜியிடம் தொலைபேசியில் தகவல் தெரிவித்ததாகவும், இது ஒருதலைப்பட்சமான முடிவு என அவர் விமர்சித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: உலக தாய்மொழிகள் தினம் இன்று..!! தமிழ் மொழியின் பெருமையைப் போற்றும் தலைவர்களின் வாழ்த்துகள்..!!
ஆர்.என். ரவி, 2021 செப்டம்பர் 18-ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநராக பொறுப்பேற்றவர். அவரது பதவிக்காலத்தில் திமுக அரசுடன் தொடர்ந்து மோதல் நிலவியது. மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவது, பல்வேறு விவகாரங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சாதகமான தீர்ப்பு பெற்றது. திமுக அமைச்சர்கள், கூட்டணி கட்சியினர் ஆர்.என். ரவியை இடமாற்றம் செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆளுநர் மாளிகை முன்பு போராட்டங்களும் நடைபெற்றன.
தமிழ்நாடு ஆளுநர் பொறுப்புக்கு கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவர் இரவு நேரத்தில் உத்தரவு பிறப்பித்ததாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் தற்காலிகமாக ஆளுநர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதேசமயம், தெலுங்கானா, இமாசல பிரதேசம், லடாக், டெல்லி, மராட்டியம், பீகார், நாகாலாந்து உள்ளிட்ட பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் ஆளுநர்கள், லெப்டினன்ட் கவர்னர்கள் நியமனங்கள் நடைபெற்றுள்ளன. இது பெரிய அளவிலான ஆளுநர் மாற்ற அலை என கருதப்படுகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆர்.என். ரவியை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்து விடை கொடுத்தார். சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகைக்கு இன்று (மார்ச் 07) சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநரை சந்தித்தார். அதைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தின் 55-வது தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள சுஷ்ருத் அரவிந்த் தர்மதிகாரியை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஏற்பட்ட இந்த ஆளுநர் மாற்றங்கள், அரசியல் கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மத்திய அரசின் இந்த நகர்வு எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்படும் அதேவேளை, அரசியல் உத்திகளுடன் தொடர்புடையதாகவும் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தேர்தல் தோல்வி பயத்தில் தான் ரூ.5,000 வரவு..!! முதல்வரை கிழித்து தொங்கவிட்ட அன்புமணி ராமதாஸ்..!!