கோவை காந்திபுரம் பகுதியில் சுமார் ₹300 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வரும் 'பெரியார் அறிவுலகம்' நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தைத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மையத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீனத் தொழில்நுட்ப வசதிகள் குறித்து அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
சுமார் எட்டு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள இந்த மையத்தில் அமையவுள்ள பிரம்மாண்ட நூலகம், மாற்றுத்திறனாளிகளுக்கானச் சிறப்புப் பகுதி மற்றும் நவீனக் கலையரங்கம் ஆகியவற்றை முதலமைச்சர் ஆய்வு செய்தார். அறிவுசார் மையத்தின் ஒவ்வொரு பகுதியையும் அவர் நுணுக்கமாகப் பார்வையிட்டார்.

மையத்தில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீனக் கோளரங்கிற்குச் சென்ற முதலமைச்சர், அங்குள்ள 3D கண்ணாடிகளை அணிந்து முப்பரிமாணக் காட்சிகளை அனுபவித்து மகிழ்ந்தார். அங்குள்ள அறிவியல் கருவிகள் மற்றும் தொழில்நுட்பக் கட்டமைப்புகளை வியப்புடன் பார்வையிட்டார். பெரியார் அறிவுலகத்தில் விசேஷமாக வடிவமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோரின் முப்பரிமாண (3D) வடிவமைப்பிலானச் சிலைகளை முதலமைச்சர் பார்வையிட்டு அதன் நுட்பங்களைப் பாராட்டினார்.
இதையும் படிங்க: கோவையில் சந்திரயான் மாதிரி சிலை திறப்பு...! இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்!
இந்த ஆய்வின் போது, கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன் குமார் ஜி. கிரியப்பனவர், மையத்தில் உள்ள வசதிகள் மற்றும் பணிகள் நிறைவடையும் காலம் குறித்து முதலமைச்சருக்கு விரிவான விளக்கம் அளித்தார்.
இந்த நிகழ்வின் போது அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கயல்விழி செல்வராஜ் மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர். மேலும், கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மேயர் மற்றும் உயர் அரசு அலுவலர்களும் இந்த ஆய்வில் பங்கேற்றனர். கோவையின் புதிய அடையாளமாக மாறவுள்ள இந்த 'பெரியார் அறிவுலகம்' விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஈஷாவில் மகா சிவராத்திரி: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!