ஆண்டுதோறும் மாசி 20ஆம் தேதி அய்யா வைகுண்டர் அவதார தின விழா கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று ஐயா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் அவதாரபதி மற்றும் கேரள மாநிலம் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் வடக்கு வாசலில் இருந்து புறப்பட்ட வாகன ஊர்வலங்கள் நாகர்கோவில் நாகராஜா திடலுக்கு நேற்று இரவு வந்தடைந்தது.
இன்று காலை நாகராஜா திடலில் இருந்து ஐயா அவதார தின விழா ஊர்வலம் சாமிதோப்பு நோக்கி புறப்பட்டது. கோட்டார், கரியமாணிக்கபுரம், வடக்கு தாமரைகுளம் வழியாக இந்த ஊர்வலம் சுவாமி தோப்பில் சென்றடைகிறது. இந்த ஊர்வலத்தில் செண்டை மேளம் முழங்க மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அகிலத்திரட்டு ஏந்திய ஐயாவின் வாகனமும் முன் சென்றது.
இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அணிவகுத்து சென்றனர்.இந்த ஊர்வலத்தில் காவி உடை அணிந்தும் காவி கொடி ஏந்தியும் ஐயா சிவ சிவ அரகரா சிவ சிவா என்ற கோஷத்துடன் பக்தர்கள் தலையில் சந்தனக்கூடம் சுமந்தவாறு சென்றனர். இந்த ஊர்வலத்தில் கன்னியாகுமரி, நெல்லை,தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.ஐயா அவதார தின விழாவை முன்னிட்டு குமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறையும் விடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டெல்லி போய் அமித் ஷா காலை...எடப்பாடி பழனிசாமியை விளாசியத் தள்ளிய நாஞ்சில் சம்பத்...!
அய்யா வைகுண்டர் அவதார தின விழாவை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சோசியல் மீடியாவில் வாழ்த்து செய்தியை பதிவிட்டுள்ளார். “இடுப்பில் இருந்த துண்டைத் தலைக்குக் கிரீடமாக மாற்றிய அய்யா வைகுண்டரை நாம் பெற்ற நாள்!. "கீழ் நோக்கிப் பிடித்தாலும், மேல் நோக்கியே எரியும் தீபத்தைப்போல, விளக்கின் ஒளியாய், வீரத் தனமாக இருங்கள்" எனச் சமத்துவக் கனலைச் சமூகத்தில் விதைத்து நிறைந்தவர் அய்யா வைகுண்டர்.'தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம்' எனும் அவரது கூற்றையே ஆட்சிக்கான அடிப்படையாய்க் கொண்டு நலிந்தோரின் நலம் நாடும் அரசாக நமது #DravidianModel அரசும் செயல்படுகிறது. அய்யா வைகுண்டரின் பொன்மொழிகளைப் பின்பற்றி நடப்போம்! சமத்துவம் பேணுவோம்! என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: முடிவுக்கு வருகிறதா முறிவு?... பா.சி கொடுத்த பைனல் ட்விஸ்ட்... திமுக - காங்., கூட்டணி குறித்து இன்று அதி முக்கிய முடிவு...!