முந்தைய திமுக அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டைத் தொடர்ந்து, தவெக அரசின் முழுமையான புதிய பட்ஜெட் ஜூலை முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதற்கு முன்னதாக, தமிழக அரசின் தற்போதைய உண்மையான நிதி நிலையை விளக்கும் வெள்ளை அறிக்கை அடுத்த சில நாட்களில் வெளியாகவுள்ளது. இந்த வெள்ளை அறிக்கைக்கு இறுதி வடிவம் கொடுப்பது மற்றும் மும்மொழிக் கொள்கை, மேகதாது அணை விவகாரம், பரந்தூர் விமான நிலையத் திட்டம் ஆகியவற்றில் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்ன என்பதை இறுதி செய்யவும் இன்றைய அமைச்சரவை கூட்டம் வழிவகுக்கும் எனக்கூறப்படுகிறது.
அதேபோல் மகளிருக்கு மாதம் ரூ.2,500, பயிர் கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான கால அவகாசம் மற்றும் நிதி மேலாண்மை ஆகியவற்றுக்கு இடையே முதலமைச்சர் விஜய் எடுக்கப் போகும் அதிரடி முடிவுகள் இன்று மதியத்திற்குள் அதிகாரப்பூர்வமாகத் தெரியவரும் எனக்கூறப்படுகிறது. தவெக ஆட்சி அமைத்த பின் நடக்கும் முதல் அமைச்சரவை கூட்டத்தில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்களுக்கு எப்படி நிதி திரட்டுவது என்பது தொடர்பாக நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று அறிவிப்பார் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டம் தமிழ்நாட்டில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக சாமானிய, கிராமப்புற மக்கள் மத்தியில் பணப்புழக்கத்தை கொண்டு வந்தது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1.31. கோடி பயனாளிகளுக்கு கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் ரூ.5,000 தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான தலா ரூ. 1000 பணமும், ரூ. 2000 கோடைக்கால சிறப்புத் தொகையும் முன்கூட்டியே வரவு வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: நாள் நட்சத்திரம் பாக்கணுமா..? வாயைத் திறங்க விஜய்..! விளாசிய TTV தினகரன்..!
அதன்பின்னர் தேர்தலில் வெற்றி பெற்று தவெக தலைவர் விஜய் முதலமைச்சர் ஆன நிலையில், மே மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 1000 ரூபாய் வழங்கப்படுமா? அல்லது விஜய் அறிவித்தது போல் மாதம் 2500 ரூபாய் வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால், திட்டத்தை சீரமைக்க விஜய் கால அவகாசம் கோரியிருந்த விஜய், முந்தைய அரசு கொண்டு வந்த நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார்.
அதன்படி, வழக்கம் போல் மே 15ம் தேதி அன்று இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1.31. கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் 1000 ரூபாய் வரவு வைக்கப்பட்டது. தமிழக அரசின் ஒட்டுமொத்த கடன் சுமை 10 லட்சம் கோடியைத் தாண்டியுள்ள நிலையில், தமிழக அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை தயாரிக்க நிதி அமைச்சர் மரிய வில்சனுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டிருந்தார். வெள்ளை அறிக்கையின் மூலம் மாநிலத்தின் நிதிநிலையை விளக்குவதுடன், தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் எவற்றை உடனடியாக நிறைவேற்ற முடியும், மீதமுள்ள திட்டங்கள் எவ்வளவு காலத்திற்குள் அமல்படுத்தப்படும் என்பதையும் முதலமைச்சர் இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் அறிவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: "தூய சக்தி பாப்பா".. கேமரா முன்னாடி முழங்குவதில் பயனில்லை..! நயினார் விமர்சனம்..!!