மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ இன்று பிற்பகல் 3 மணியளவில் தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யை சந்திக்கிறார். இந்த சந்திப்பு, மதிமுகவுக்குள் நிலவும் கூட்டணி தொடர்பான விவாதங்கள் மற்றும் வரும் ஜூன் 27ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தின் பின்னணியில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
மதிமுக நிர்வாகிகள் பலரும் தவெக உடன் கூட்டணி வைக்க வலியுறுத்தி வரும் நிலையில் இந்த சந்திப்பு அமைந்துள்ளது. கட்சியின் உள்ளடி அமைப்புகளில் இருந்து வரும் அழுத்தத்தின் காரணமாகவே வைகோ இந்த முடிவுக்கு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. மதிமுகவின் எதிர்கால அரசியல் பாதையை தீர்மானிக்கும் வகையில் ஜூன் 27ம் தேதி சென்னையில் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கூட்டணி குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என வைகோ ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

சமீப காலமாக மதிமுகவில் கூட்டணி தொடர்பான அதிருப்தி அதிகரித்து வருகிறது. திமுக தலைமையிலான கூட்டணியில் போதிய இடங்கள் கிடைக்காதது, சின்னம் தொடர்பான சிக்கல்கள் உள்ளிட்டவை கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. திருச்சி எம்.பி. துரை வைகோ உள்ளிட்டோர் இந்த அதிருப்தியை பகிரங்கமாகவும் வெளிப்படுத்தியுள்ளனர். பொதுக்குழு கூட்டத்தில் இந்த விவகாரங்கள் முழுமையாக விவாதிக்கப்பட்டு, கட்சியின் எதிர்கால நிலைப்பாடு தீர்மானிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டம்..! கவனம் ஈர்க்கும் பட்ஜெட், முக்கிய அறிவிப்புகள்..!
முதலமைச்சர் ஜோசப் விஜய் பொறுப்பேற்ற பிறகு மதிமுக தலைவர்களுடன் தொடர்பை வலுப்படுத்தியுள்ளார். முன்னதாக வைகோவின் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பு உள்ளிட்டவை அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றன. இன்றைய சந்திப்பில் தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழல், உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவான விவாதம் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. கூட்டணி தொடர்பான விவாதங்கள் இந்த சந்திப்பில் முக்கிய இடம் பெறலாம். மதிமுகவின் இந்த முடிவு தமிழ்நாட்டு அரசியலில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: விவசாயிகளுக்கு குட் நியூஸ்... பயிர்க்கடன் தள்ளுபடியில் புது அப்டேட்... தமிழக அரசு அறிவிப்பு..!!