கம்யூனிஸ்ட்டுகளைப் பார்த்துக் கேள்வி கேட்கும் தவெக அமைச்சர்களே, பாஜக - அதிமுக கூட்டணியில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களை எதற்காக வலுக்கட்டாயமாகப் பதவி விலக வைத்தீர்கள் என்றும், தங்களைத் தூய அரசியல் சக்தியாகக் காட்டிக்கொண்டு திரைக்குப் பின்னால் இத்தகைய கீழ்த்தரமான கள்ளத்தனங்களை அரங்கேற்றுவது ஏன் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினருமான கே. சுப்பராயன் மிகக் கடுமையாக சாடியுள்ளார்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் அனல் பறந்து வரும் சூழலில், ஆளும் தவெக அமைச்சர்கள் கம்யூனிஸ்ட்டுகளின் தேர்தல் நிலைப்பாடு மற்றும் கொள்கைகள் குறித்துத் தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், தவெக அமைச்சர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) மூத்த தலைவரும் திருப்பூர் எம்.பி.யுமான கே. சுப்பராயன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மிகக் காட்டமான அறிக்கையைப் பதிவிட்டு, ஆளும் கட்சித் தலைமைக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், கம்யூனிஸ்ட்டுகளை நோக்கி வினாத் தொடுக்கும் தவெக அமைச்சர்களே, கடந்த தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களை எதற்காகத் திட்டமிட்டு ராஜினாமா செய்ய வைத்தீர்கள்? அவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்த உடனேயே, சற்றும் கூச்சமின்றி எதற்காக அவர்களைத் தவெகவில் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டீர்கள்? அதுமட்டுமின்றி, அவ்வாறு கட்சி தாவியவர்களில் இருவரை தற்போது இடைத்தேர்தலில் தவெகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக எதற்காகத் தேர்ந்தெடுத்துக் களமிறக்கியுள்ளீர்கள்? இதன் பின்னால் ஒளிந்திருக்கும் அம்மணமான அரசியல் உள்நோக்கம் என்ன? என்று தோலுரித்துக் காட்டியுள்ளார்.
இதையும் படிங்க: திமுக டெபாசிட் இழக்கும்..! இன்ஸ்டாவை வைத்தே அவங்கள முடிச்சிட்டோம்..! அமைச்சர் ஆதவ் பேச்சு..!!
மேலும் ஆளும் தவெகவின் அரசியல் போலித்தனத்தைக் கடுமையாகச் சாடிய அவர், நாங்கள் தான் மாற்று அரசியல் பேசும் தூய சக்தி என்று பொதுவெளியில் கபட வேடமிட்டு நடிக்கிற உங்களிடம் ஏன் இத்தனை பெரிய கள்ளத்தனம்? ஊழலும் முறைகேடுகளும் உறுதிப்படுத்தப்படுமானால், அது யாராக இருந்தாலும் சரி, ஆளும் அதிகார வர்க்கமாகவே இருந்தாலும் சரி, அதனைத் துணிவோடு எதிர்த்து மக்கள் மன்றத்தில் நின்றவர்கள் கம்யூனிஸ்டுகள்; நாளையும் அத்தகைய மக்கள் விரோதச் செயல்களை சமரசமின்றி உறுதியுடன் எதிர்ப்போம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: நெருங்கியது இடைத் தேர்தல்... இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!! பரபரக்கும் அரசியல் களம்..!!