தமிழக முழுவதும் நாளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. தலைமைச் செயலாளர் மீ. சாய் குமார் பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் எனக் கூறி, அவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீதும் முறையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.சமீபத்தில் உயர்கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இடதுசாரிக் கட்சிகள் மற்றும் காக்ரோஜ் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்கக் கூடாது என அந்தச் சுற்றறிக்கை அறிவுறுத்தியிருந்தது.
மாணவர்கள் போராட்ட உணர்வுக்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும் என்ற தொனியில் அது அமைந்திருந்தது. இதற்கு மாணவர் அமைப்புகளும் இடதுசாரிக் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பின்னர் அந்தச் சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டாலும், அதன் பின்னணியில் தலைமைச் செயலாளர் இருப்பதாகச் சிபிஎம் குற்றம்சாட்டியுள்ளது.ஜூலை மாதம் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் தலைமையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து சிறப்புச் செயலாளர் அனுப்பிய கடிதத்தில், மாணவர்களையும் இளைஞர்களையும் போராட்டங்களில் பங்கேற்க விடாமல் தடுக்க இடைத்துறை ஒருங்கிணைப்பு தேவை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தக் கடிதம் கல்லூரிக் கல்வி இயக்ககம், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்பட்டது. சில இடங்களில் இன்னும் அது திரும்பப் பெறப்படவில்லை எனச் சிபிஎம் சுட்டிக்காட்டியுள்ளது.

மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்ட அறிக்கையில், இடதுசாரி மாணவர் இயக்கங்களைத் குறிவைத்ததன் மூலம் தலைமைச் செயலாளரின் சித்தாந்த சாய்வு வெளிப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அரசு எந்திரத்தைத் தனது நோக்கத்திற்காகத் தவறாகப் பயன்படுத்தும் அளவுக்கு அவர் சென்றுள்ளதாகவும், நியாயமான நிர்வாகத்தை இனி அவரிடமிருந்து எதிர்பார்க்க முடியாது என்றும் கூறியுள்ளார். மாணவர்களின் போராட்ட உரிமையை அடக்கும் எதேச்சதிகார மனோபாவம் இதில் பிரதிபலிப்பதாகவும், இது ஒன்றிய அரசின் பாணியை அடியொற்றி எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: விடிந்ததுமே சி.விஜய்க்கு செம்ம ஷாக் கொடுத்த சிபிஎம்... தவெகவை அடித்து துவைத்த பெ.சண்முகம்...!
முதல்வரின் அனுமதியுடன் இது நடந்ததா என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார். கல்லூரிக் கல்வி இயக்ககம் மட்டும் தவறு செய்தது என்பது உண்மையல்ல எனவும், சட்டம் ஒழுங்கு கூட்டத்தின் முடிவும் சிறப்புச் செயலாளர் கடிதமும் தொடர்ந்து நீடிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை அமைச்சர் அளித்த விளக்கத்தையும் அவர் நிராகரித்துள்ளார்.இதற்கு இணையாக குஜிலியம்பாறை வட்டாட்சியர் இடதுசாரிக் கட்சி உறுப்பினர்களின் விவரங்களைச் சேகரிக்க உத்தரவிட்ட சுற்றறிக்கையும் சர்ச்சையை உருவாக்கியது.
அது திரும்பப் பெறப்பட்டாலும், வட்டாட்சியர் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனச் சிபிஎம் குற்றம்சாட்டுகிறது. மாவட்ட ஆட்சியர் குறிப்பில் பயிற்சி முடிந்ததால் வேறு பணியில் சேர்க்கப்பட்டதாகக் கூறப்பட்டதை, நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கான சான்றாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த இரண்டு சம்பவங்களையும் தற்செயலானவை என ஏற்க முடியாது எனச் சண்முகம் வலியுறுத்தியுள்ளார். தமிழக முதல்வரும் அரசும் தங்கள் நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும், தலைமைச் செயலாளர் பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் என்ற முறையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். அதற்காக நாளை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வலிமையான கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனக் கட்சி அறைகூவல் விடுத்துள்ளது. அனைத்துத் தரப்பினரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா? நெல்லை பல்கலைக்கழக நிகழ்வுக்கு சிபிஎம் கண்டனம்!