கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்டத்தில் நடைபெற்று வரும் மணல் கடத்தல் மற்றும் அதற்குத் துணை போகும் அதிகாரிகள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி-க்குத் தொடர்பு கொண்டும் அவர்கள் அழைப்பை ஏற்காதது பரபரப்பை ஏற்படுத்தியது.

நெரூர் மல்லம்பாளையம் பகுதியில் காவிரி ஆற்றில் பகல், இரவாக மணல் கொள்ளை நடக்கிறது. நேற்று நாங்கள் நேரில் சென்றபோது அங்கு 5 ஹிட்டாச்சி இயந்திரங்கள் மற்றும் 5 டிப்பர் லாரிகள் மணல் அள்ளிக் கொண்டிருந்தன. இது தொடர்பாகப் புகார் அளித்தும், சுமார் 6 மணி நேரம் தாமதமாகவே காவல்துறை முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளது. இதில் ஒரு மாட்டு வண்டி கூட இல்லை, ஆனால் மாட்டு வண்டித் தொழிலாளர்களைத் தடுத்ததாகத் திமுகவினர் பொய்யானப் புகாரைப் பரப்புகின்றனர். மணல் கடத்தலைத் திசைதிருப்புவதற்காக வன்னியர் மக்கள் கட்சி என்ற அமைப்பைச் சேர்ந்த ஒருவரை வைத்து திமுக நாடகம் ஆடுகிறது. 300 அடியாட்களுடன் தாக்குதல் நடத்தியதாகக் கூறுவது முற்றிலும் பொய். கரூரில் ஜாதிப் பிரச்சினையை உருவாக்கிப் பதற்றத்தை ஏற்படுத்தவும், மணல் கொள்ளையை மறைக்கவும் ஆளுங்கட்சியினர் திட்டமிடுகின்றனர். மாட்டு வண்டிகளில் மணல் எடுப்பதை நாங்கள் என்றும் எதிர்க்கவில்லை; இயந்திரங்கள் மூலம் லாரிகளில் கடத்தப்படுவதையே எதிர்க்கிறோம்.
இதையும் படிங்க: விஜய் திரையில்தான் சூப்பர் ஸ்டார்; அரசியலில்? தவெக குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
மணல் கொள்ளை குறித்துப் புகார் அளிக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரைத் தொடர்பு கொண்டால் அவர்கள் போனை எடுப்பதில்லை. ஐ.ஜி-யிடம் புகார் அளித்த பிறகே எஃப்.ஐ.ஆர் போடப்பட்டது. இப்போது கூட என் வீட்டின் அருகே மாட்டு வண்டிகளை நிறுத்திப் போராட்டம் செய்ய வைத்துப் பதற்றத்தை உருவாக்குகின்றனர். லாரிகள் மூலம் மணல் கடத்தல் தொடர்ந்தால் மீண்டும் மிகப்பெரியப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர் எச்சரித்தார்.
செய்தியாளர் சந்திப்பின் இறுதியில், அவர் நேரடியாக எஸ்பி-க்கு போன் செய்தபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை. ஆட்சியரின் உதவியாளர் மட்டுமே அழைப்பைப் பெற்றுப் பதில் அளித்தார். இந்தச் சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சுடுகாட்டில் வடிவேலு புலம்புவது போல முதல்வர் புலம்புகிறார்: மதுரையில் செல்லூர் ராஜு கிண்டல்!