பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (CPS) கீழ் பணியாற்றி ஓய்வு பெற்ற அல்லது பணியின்போது உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் இடைக்கால மாதாந்திர ஊதியத்தில் அகவிலைப்படியை 60 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் வரையிலான இடைக்கால ஏற்பாடாகும்.
CPS கீழ் உள்ளவர்களுக்கு ஓய்வு அல்லது மரணத்தின் போது இடைக்கால மாத ஊதியம் வழங்கப்படுகிறது. இது கடைசியாக பெற்ற அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் அல்லது ரூ.10,000 இதில் எது அதிகமோ அதனுடன் அகவிலைப்படி சேர்த்து கணக்கிடப்படுகிறது. ஆறாவது ஊதியக்குழு விகிதத்தில் கடைசி ஊதியம் பெற்றவர்களுக்கு பொதுவான அகவிலைப்படி ஜனவரி 1, 2026 முதல் 262 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், இடைக்கால ஊதியம் மற்றும் குடும்ப ஊதியத்திற்கு ஒரே சீராக 60 சதவீத அகவிலைப்படி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஆறாவது ஊதியக்குழு கீழ் அடிப்படை ஊதியம் ரூ.10,000-க்கு குறைவாகவும், ஏழாவது ஊதியக்குழு நிர்ணயிக்கப்படாமலும் இருந்தால், குறைந்தபட்சம் ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். அடிப்படை ஊதியம் ரூ.10,000 அல்லது அதற்கு மேல் இருந்தால், முழு 262 சதவீத அகவிலைப்படி அளிக்கப்படும். இந்த உத்தரவை செயல்படுத்த கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: கொலம்பியாவில் தீராத சோகம்... தங்க சுரங்க நிலச்சரிவில் சிக்கி 13 தொழிலாளர்கள் பலி...!

1.4.2003க்குப் பிறகு பணியில் சேர்ந்து, 1.1.2026 அல்லது அதற்குப் பின் ஓய்வு பெற்ற அல்லது இறந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு CPS அல்லது TAPS இல் ஒன்றைத் தேர்வு செய்யும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிக்காலம் நிறைவு செய்திருக்க வேண்டும். TAPS கீழ் இடைக்கால தொகை பெற விரும்பினால் அல்லது CPS கணக்கில் உள்ள முழுத் தொகையை இறுதித் தீர்வாகப் பெற விரும்பினால், உரிய படிவத்தை பூர்த்தி செய்து அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விருப்பம் தெரிவித்தவர்களுக்கு IFHRMS வழியாக தொகை பதிவேற்றம் செய்யப்படும்.
TAPS முழுமையாக அமலானால், கடைசி மாத ஊதியத்தில் (அடிப்படை + அகவிலைப்படி) 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்படும். ஊழியர்கள் 10 சதவீதம் பங்களிக்க, மீதியை அரசு ஏற்கும். குடும்ப ஓய்வூதியம் 60 சதவீதமாக இருக்கும். இந்த இடைக்கால நடவடிக்கை ஆயிரக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கும் குடும்பங்களுக்கும் நிவாரணம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மதுரை மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி வழக்கில் மீண்டும் அதிரடி... ஓய்வு பெற்ற சார் பதிவாளர் கைது...!