வடமேற்கு நைஜீரியாவின் சோகோடோ மாநிலத்தில் வியாழக்கிழமை படகு கவிழ்ந்த விபத்தில் குறைந்தது 51 பேர் உயிரிழந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். விபத்து நடந்த கோரோன்யோ மாவட்டத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்து குறித்து கோராவ் கிராமத்தின் முன்னாள் கவுன்சிலர் இப்ராஹிம் மூசா கூறுகையில், இதுவரை 51 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 46 உடல்கள் ஏற்கனவே அடக்கம் செய்யப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.
உள்ளூர் விவசாயியான இல்யாசு ஆதாமு கூறுகையில், அந்தப் படகு அதிக பாரம் ஏற்றப்பட்டிருந்ததாகவும், பயணத்தைத் தொடங்கிய ஒரு நிமிடத்திலேயே ஆற்றில் கவிழ்ந்ததாகவும் தெரிவித்தார். படகில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பு.. அகவிலைப்படி 60% ஆக அதிகரிப்பு!! தமிழக அரசு அதிரடி!!

இந்த விபத்து தொடர்பாக நைஜீரியாவின் தேசிய அவசரகால மேலாண்மை முகமை அதிகாரிகள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் குறித்து தேவையான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கையை உடனடியாக உறுதி செய்ய முடியவில்லை என அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தாஹிர் குரே தெரிவித்துள்ளார்.
நைஜீரியாவின் ஆறுகள் மற்றும் நீர்வழிகளில் அதிக பாரம் ஏற்றுதல், படகுகளை முறையாகப் பராமரிக்காதது மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாதது உள்ளிட்ட காரணங்களால் இதுபோன்ற படகு விபத்துகள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன.
கடந்த மாதம் ஜிகாவா மாநிலத்தில் ஏற்பட்ட படகு விபத்தில் குறைந்தது 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதேபோல், கடந்த ஜனவரி மாதம் ஜிகாவா மாநிலத்தில் இருந்து யோபே மாநிலத்திற்கு விவசாயிகள் மற்றும் மீனவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 26 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கொலம்பியாவில் தீராத சோகம்... தங்க சுரங்க நிலச்சரிவில் சிக்கி 13 தொழிலாளர்கள் பலி...!