மத்திய அரசு மேற்கொள்ள உத்தேசித்துள்ள தொகுதி மறுவரையறைப் (Delimitation) பணிகள் மற்றும் அதனால் தமிழ்நாட்டிற்கு ஏற்படக்கூடிய அரசியல், சமூகத் தாக்கங்கள் குறித்து விவாதிப்பதற்காக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் முக்கியக் கலந்தாலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
தொகுதி மறுவரையறை செய்யப்படுவதன் மூலம் தென் மாநிலங்களின், குறிப்பாகத் தமிழ்நாட்டின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் குறையக்கூடும் என்ற அச்சமும் கவலையும் நிலவி வரும் சூழலில், இக்கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி (சனிக்கிழமை) பிற்பகல் 3.00 மணிக்கு, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தின் கூட்டரங்கில் (3-ஆம் தளம்) இந்தக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சி மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் இக்கூட்டத்தில் பங்கேற்பதற்கான அதிகாரப்பூர்வ அழைப்பிதழ்கள், புதுதில்லியில் உள்ள 'தமிழ்நாடு இல்லம்' மூலமாக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: ராகுல்-கிரண் ரிஜிஜு அவசர சந்திப்பு... முக்கிய மசோதாக்களில் உடன்பாடு எட்டப்படாததால் மீண்டும் முடங்கும் நாடாளுமன்றம்!

மக்கள்தொகைக் கட்டுப்பாட்டைச் சிறப்பாக நடைமுறைப்படுத்திய தமிழ்நாட்டிற்குத் தொகுதி மறுவரையறைப் பணிகளால் எவ்விதப் பாதிப்பும் அல்லது நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கை குறைப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. எனவே, இக்கூட்டத்தில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகளும் கேட்டறியப்பட்டு, மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகத் தமிழ்நாடு சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் கூட்டுக் குரல் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படவுள்ளது.
இதையும் படிங்க: பாராளுமன்றத்தில் அடுத்த வாரம் அதிரடி... தொகுதி மறுவரையறை மசோதா அறிமுகம்? நாடு முழுவதும் எதிர்பார்ப்பு!