தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முன்பதிவு நிறைவடைந்துள்ளது. மேலும், பல பயணிகளுக்கு சர்வர் பிரச்சினை ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ரயிலில் பயணம் மேற்கொள்ள விரும்புபவர்கள், தங்களுடைய பயணத் தேதியிலிருந்து 60 நாட்களுக்கு முன்னதாகவே ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்து பெறக்கூடிய நடைமுறை தற்போது அமலில் இருந்து வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. வார நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களை ஒட்டி தீபாவளி பண்டிகை வருவதால், பெருவாரியான மக்கள் முன்கூட்டியே தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பயணிகளின் கனிவான கவனத்திற்கு... இன்று முதல் சென்னை புறநகர் ரயில் சேவையில் அதிரடி மாற்றம்...!
அந்த வகையில், தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சொந்த ஊர் செல்லத் திட்டமிட்டவர்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு கடந்த இரண்டு நாட்களாக தொடங்கியது.
காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது என்றால், 8.05 மணிக்கே தென்மாவட்டங்களுக்குச் செல்லக்கூடிய ரயில்களில் பெரும்பாலான டிக்கெட்டுகள் முழுமையாக விற்றுத் தீர்ந்ததைப் பார்க்க முடிந்தது.
அதுமட்டுமல்லாமல், பல பயணிகளுக்கு சர்வர் கோளாறும் ஏற்பட்டது. ஒரே நேரத்தில் பெருவாரியான மக்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முயற்சித்ததால், சர்வரில் கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பலருக்கு வெயிட்டிங் லிஸ்ட் வந்தது. இதன் காரணமாக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இப்படிப்பட்ட நிலையில்தான் மூன்றாவது நாளாக, அதாவது தீபாவளி பண்டிகைக்கு முதல் நாளான சனிக்கிழமை சொந்த ஊர் செல்லக்கூடியவர்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே தென்மாவட்டங்களுக்குச் செல்லக்கூடிய ரயில்களில் முன்பதிவு நிறைவடைந்துள்ளது.
சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு, குறிப்பாக தென்மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை, முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளின் எண்ணிக்கையைவிட பல மடங்கு அதிகமாக இருப்பதால், ரயில் டிக்கெட் கிடைக்காமல் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஒரே நேரத்தில் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்ய பலர் முயற்சிப்பதால், முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. பலருக்கும் சர்வர் கோளாறு ஏற்பட்டதால், டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் தவித்தனர்.
மேலும், சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் முழுமையாக விற்றுத் தீர்ந்துவிட்டதாக வெயிட்டிங் லிஸ்ட் காட்டப்பட்டதால், பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்திய ரயில்வேயைப் பொறுத்தவரையில், சமீபத்தில்தான் புதிய கிளவுட் அடிப்படையிலான பயணிகள் முன்பதிவு அமைப்பான பிஆர்எஸ் மேம்படுத்தப்பட்டது. இந்த அமைப்பு ஒரு நிமிடத்திற்கு ஒன்றரை லட்சம் டிக்கெட்டுகள் மற்றும் 40 லட்சம் விசாரணைகளைக் கையாளக்கூடிய வகையில் மேம்படுத்தப்பட்டிருந்தது.
முன்னதாக ஒரு நிமிடத்திற்கு 25 ஆயிரம் முதல் 32 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்ற நிலையில், இந்த வசதி மேம்படுத்தப்பட்டது.
இருப்பினும், தற்போது பண்டிகைக் காலங்களில் பலருக்கும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் சிரமம் ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
ரயில் டிக்கெட் முன்பதிவு சேவை விரிவுபடுத்தப்பட்டிருந்தாலும், பயணிகளின் தேவை பல மடங்கு அதிகரித்திருப்பதால், டிக்கெட் முன்பதிவு செய்ய முடியவில்லை என்ற வேதனையை பயணிகள் பதிவு செய்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையைக் கொண்டாட ஒரே நேரத்தில் பொதுமக்கள் பெருவாரியாக டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சிப்பதால் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுவதாக ரயில்வே தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: சென்னை எழும்பூர் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்! தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!