வரும் செப்டம்பர் 15ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுகவின் முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இதையொட்டி, ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் தந்தை பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர் உள்ளிட்ட விருதுகளுக்கான விருதாளர் பட்டியலை திமுக தலைமைக் கழகம் தற்போது அறிவித்துள்ளது.
அதன்படி, தந்தை பெரியார் விருதை திமுக விவசாய அணியின் துணைச் செயலாளர் செல்லப்பா பெற உள்ளார். அதேபோல், அண்ணா விருதை சேலம் ஜி.கே.கே. சுபாஷ் பெற உள்ளார். கலைஞர் விருதை திமுக துணைப் பொதுச் செயலாளரும், திமுக மாநிலங்களவை குழுத் தலைவருமான திருச்சி சிவா பெற உள்ளார்.
பாவேந்தர் விருதை திமுக மருத்துவ அணித் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி என்.வி.என். சோமு பெற உள்ளார்.
இதையும் படிங்க: அனல்மின் திட்ட அறிவிப்பு தேவையா.? தனியாருக்கு விற்க போறீங்களா.? முதல்வருக்கு அப்பாவு கேள்வி..!!
பேராசிரியர் விருது, தலைமைச் செயற்குழு உறுப்பினர் நிசா எஸ். அகமது தம்பிக்கு வழங்கப்பட உள்ளது. மு.க. ஸ்டாலின் விருது, இளைஞரணி துணைச் செயலாளர் நா. இளையராஜாவுக்கு வழங்கப்படும் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
அதேபோல், இந்த முப்பெரும் விழாவில் முரசொலி அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும் முரசொலி செல்வம் விருது, ஊடகவியலாளரும் எழுத்தாளருமான திருமாவேலனுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டிற்கான முரசொலி செல்வம் விருது, மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட்டது.
தொடர்ச்சியாக முரசொலி செல்வம் அவர்களின் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் என்றும், ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் முப்பெரும் விழா நிகழ்ச்சியில் இந்த விருது வழங்கப்படும் என்றும் திமுக தலைவர் அறிவித்திருந்தார்.
அதன்படி, இந்த ஆண்டிற்கான, அதாவது 2026ஆம் ஆண்டுக்கான முரசொலி செல்வம் விருது, ஊடகவியலாளரும் எழுத்தாளருமான திருமாவேலனுக்கு வழங்கப்பட உள்ளது.
வரும் செப்டம்பர் 15ஆம் தேதி மாலை 6 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற உள்ள திமுகவின் முப்பெரும் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன.
இதையும் படிங்க: சுமை தூக்கும் தொழிலாளர்கள்..? மதிக்குமா தவெக அரசு... வேல்முருகன் சரமாரி கேள்வி.!!