சென்னை: தி.மு.க.வில் மீண்டும் செயல் தலைவர் பதவியை உருவாக்கி, கட்சியை பலப்படுத்த வேண்டும் என துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி மற்றும் இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் ஆதரவாளர்கள் தீவிரமாக வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர். சட்டசபைத் தேர்தலில் ஏற்பட்ட பெரும் தோல்விக்குப் பிறகு கட்சியில் உள்ள உள் மோதல்கள் வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியுள்ளன.
தோல்விக்கான காரணங்களை அறிய 36 பேர் கொண்ட கள ஆய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்தக் குழு ஜூன் 5-ம் தேதி தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது. அதன் அடிப்படையில் கட்சி நிர்வாக அமைப்பில் மாற்றங்கள் செய்ய தலைமை திட்டமிட்டுள்ள நிலையில், செயல் தலைவர் பதவி குறித்த பேச்சு தீவிரமடைந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவர் மற்றும் முன்னாள் மாவட்டக் கவுன்சிலர் ஏ.ஜி. ரவி, “கனிமொழியை செயல் தலைவராக நியமிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். அதேசமயம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இளைஞரணி கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள், “உதயநிதி ஸ்டாலின் செயல் தலைவராக பொறுப்பேற்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: அதிகாரிகளைத் தரமான நாற்காலியில்தான் அமர வைத்தேன் - தவெக எம்எல்ஏ கனிமொழி விளக்கம்!

கடந்த 2017-ம் ஆண்டு மறைந்த கருணாநிதியின் உடல்நிலை காரணமாக ஸ்டாலினுக்கு செயல் தலைவர் பதவி உருவாக்கப்பட்டது. 2018-ல் கருணாநிதி மறைவுக்குப் பின் ஸ்டாலின் தலைவரானதும் இந்தப் பதவி கட்சி விதிகளில் இருந்து நீக்கப்பட்டது. தற்போது அதை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சி நடைபெறுகிறது.
கட்சி மூத்த நிர்வாகிகள் சிலர் கூறுகையில், “கனிமொழி 30 தொகுதிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டும் புறக்கணிக்கப்பட்டார். இளைஞரணி மற்றும் மகளிரணிக்கு போதிய வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் இளைஞர்கள் தமிழக வெற்றிக் கழகத்துக்கு தாவும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்கவே இந்த முயற்சி” எனத் தெரிவித்தனர்.
கனிமொழியின் செயல்பாடுகள், குறிப்பாக மகளிரணி மற்றும் சில மாவட்டங்களில் அவர் பெற்ற வெற்றிகளை சுட்டிக்காட்டி, அவருக்கு செயல் தலைவர் பதவி வழங்க வேண்டும் என மகளிரணி நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர். இறுதி முடிவு மு.க. ஸ்டாலின் கையில்தான் உள்ளது.
தி.மு.க.வில் இந்தப் புதிய பதவி உருவாக்கம் கட்சியை பலப்படுத்துமா அல்லது உள் மோதலை அதிகரிக்குமா என்பது அரசியல் வட்டாரங்களில் தீவிர விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது.
இதையும் படிங்க: திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிவு? நாடாளுமன்றத்தில் இருக்கை மாற்ற கோரி கனிமொழி கடிதம்!