சென்னை: சட்ட விரோத பணப் பரிமாற்ற மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சரும் தி.மு.க. மூத்த தலைவருமான அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குத் தொடர அனுமதி கோரி அமலாக்கத்துறை (ED) தமிழக வெற்றிக் கழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இந்த நடவடிக்கை தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் தொகுதியில் இருந்து சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற அனிதா ராதாகிருஷ்ணன், தி.மு.க. தோல்வியைத் தொடர்ந்தும் தொடர்ந்து செயல்பாட்டில் இருந்து வருகிறார்.
கடந்த சில நாட்களாக நன்றி தெரிவிப்பு கூட்டங்களை நடத்தி பல்வேறு அரசியல் கருத்துக்களை தெரிவித்து வரும் அவர், தூத்துக்குடி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியை ஒழித்துக் கட்டுவேன் என சபதமும் எடுத்திருந்தார். இந்நிலையில் தான் அவருக்கு எதிரான புதிய நடவடிக்கை வந்துள்ளது.
இதையும் படிங்க: காங்கிரஸ் இல்லாத தூத்துக்குடி மாவட்டமாக மாற்றிக் காட்டுவேன்!! முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சபதம்!
அமலாக்கத்துறை அனுப்பிய நான்கு பக்க கடிதத்தில், அனிதா ராதாகிருஷ்ணன் மீது சட்ட விரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. இதேபோல் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதும் வழக்குத் தொடர அனுமதி கோரி ஐந்து நாட்களுக்கு முன்பு கடிதம் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு இரு கடிதங்களையும் பெற்றுக் கொண்டதை உறுதி செய்துள்ளது. ஆனால் இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. அமலாக்கத்துறை தனது கடிதத்தில் ‘பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா’ (BNSS) பிரிவு 218-ஐ மேற்கோள் காட்டியுள்ளது. இதன்படி, கடிதம் பெற்ற 120 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படாவிட்டால், அனுமதி வழங்கப்பட்டதாகவே கருதப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. வட்டாரங்கள் இந்த நடவடிக்கையை அரசியல் பழிவாங்கல் என விமர்சித்து வருகின்றன. அதேசமயம், புதிய அரசு எந்த அழுத்தத்துக்கும் இடம் கொடுக்காமல் சட்டத்தின் படியே முடிவு எடுக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்து செய்திகளில் இருப்பதால் இந்த வழக்கு மேலும் கவனம் பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தி.மு.க.வுக்கு புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் மீதான அமலாக்கத்துறை நடவடிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசின் அடுத்த நகர்வு எப்படி இருக்கும் என்பதை அரசியல் களம் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளது.
இதையும் படிங்க: அமிர்தராஜ் தோத்தா? அனிதா ராதாகிருஷ்ணனே பொறுப்பு?! முதல்வர் ஸ்டாலினுக்கு பறந்த முக்கிய கடிதம்!!