தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் களமிறங்கியுள்ளனர். இதனால் தமிழகமே பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக (அமமுக) வேட்பாளரை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், திமுக ஆட்சியின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். “திமுக ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது” என்று குற்றம் சாட்டினார். மேலும், “திமுக அரசு குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது. சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்துள்ளது. இந்த ஆட்சி தொடர வேண்டுமா?” என்று மக்களிடம் கேள்வி எழுப்பினார்.

அதிமுக ஆட்சிக்கு வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த எடப்பாடி பழனிசாமி, “அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ‘யார் அந்த சார்?’ என்று கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். திமுக ஆட்சியில் தரமான மழைநீர் வடிகால் அமைப்புகள் உருவாக்கப்படவில்லை. அதனால்தான் சென்னை மக்கள் ஒவ்வொரு மழைக்காலத்திலும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றனர்” என்றார்.
இதையும் படிங்க: சீர்காழி தேர்தல் பரப்புரை: நான் உங்கள் வீட்டு மாப்பிள்ளை! முதல்வர் மு.க. ஸ்டாலின் உணர்ச்சிமிக்க பேச்சு!
ஊழல் குறித்தும் திமுகவை கடுமையாக விமர்சித்த அவர், “ஊழல் செய்வதுதான் திமுகவின் முதன்மை வேலையாக இருக்கிறது. திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளில் வெறும் நான்கில் ஒரு பங்கு மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார். கல்விக் கடன் ரத்து, கியாஸ் சிலிண்டருக்கு மானியம், ரேஷன் கடைகளில் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்குவது உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், கஞ்சா விற்பனையாளர்களுக்கு திமுக அரசே துணை போவதாகவும் குற்றம் சாட்டிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மூன்று மாதங்களுக்குள் கஞ்சா முழுமையாக ஒழிக்கப்படும்” என்று உறுதியளித்தார். மின்கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது, வீட்டு வரி அதிகரிக்கப்பட்டுள்ளது, குப்பைக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எடுத்துக்காட்டிய அவர், “நாட்டில் குப்பைக்கும் வரி விதித்த ஒரே அரசு திமுக ஆட்சிதான்” என்று விமர்சித்தார்.

திமுக ஆட்சியை “கருணாநிதி குடும்பத்தின் வளமைக்காக நடைபெறும் குடும்ப ஆட்சி” என்றும், “வாரிசு அரசியல்” என்றும் விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, “இந்த வாரிசு அரசியல் தமிழகத்துக்கு தேவையா?” என்று மக்களிடம் கேள்வி எழுப்பினார். திமுகவின் கூட்டணிக் கட்சிகளின் நிலையைச் சுட்டிக்காட்டிய அவர், “திமுக கூட்டணி கட்சிகளைப் பார்க்கும்போது பரிதாபமாக உள்ளது.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். எடப்பாடி பழனிசாமியின் இந்த பிரச்சாரம் சைதாப்பேட்டை தொகுதியில் அதிமுக - அமமுக கூட்டணிக்கு வலுசேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அடிமை அதிமுக-வின் முதுகில் ஏறி வரும் பாஜக-வைத் தடுப்போம்! நெல்லையில் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின்பிரச்சாரம்!