மேட்டூர் அணையிலிருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட போதும், பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் கருகி வரும் குறுவை நெற்பயிர்களை காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் 1,60,000-க்கும் மேற்பட்ட பரப்பளவில் விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலான விவசாயிகள் ஜூன் 12 மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீரை நம்பி சாகுபடி செய்தனர். ஆனால் வடிகால்களை முறையாக தூர்வாராததும், உரிய வகையில் கணக்கீடு செய்து முறை வைத்து நீர் வழங்காததின் காரணமாக மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் குறுவை பயிர்கள் கருக தொடங்கி வருகிறது.
குறிப்பாக பாண்டவை ஆறு பாசனத்தில் கூடூர் சேந்தனாங்குடி , கீழ கூத்தங்குடி,தென்னவராயநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மேலும் தண்ணீர் தட்டுப்பாட்டால் உரம் கொடுக்க முடியாமலும் களை எடுக்க முடியாத நிலையும் ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். தண்ணீர் தேவை உள்ள டெல்டா மாவட்டங்களுக்கு பகிர்ந்து அளிக்காத நிலையில் கடலுக்கு தண்ணீரை திருப்பி விடும் நிலை அரசு அதிகாரிகளின் கவனக் குறைவு அவர்களை மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: மக்களே உஷார்... 3வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை! கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
மேட்டூர் அணைக்கு வரத்து ஒரு லட்சம் கன அடிக்கு மேல் வரும் நிலையில் அப்படியே ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீரை திறந்து விட்டு வரும் நிலையிலும், மேலும் திருவாரூர் அருகே கூடூர், பெருங்குடி, புலிவலம் உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை நீர் கிடைக்காததால் குறுவை சாகுபடி விவசாயிகள் கைவிட்ட அவலமும் அரங்கேறியுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாக நீர் திறக்கப்பட்ட போதும், பொதுப்பணித்துறை அதிகாரிகளின் நிர்வாக சீர்கேட்டாலும், அலட்சியத்தாலும் இது போன்ற இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
உடனடியாக முறை வைக்காமல் ஆறுகளில் நீர் வழங்கினால் மட்டுமே எஞ்சி உள்ள நெற்பயிரை காப்பாற்ற முடியும். எனவே அரசு உடனடியாக தலையிட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட வழிவகை செய்யுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: இப்படியா நடந்துக்குறது? ஆத்துல தண்ணி வரல.. ஆனா BEACH-க்கு தண்ணி போகுது! பி.ஆர்.பாண்டியன் வேதனை..!