தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை முதலாமாண்டு பாடப்பிரிவுகளில் சேரத் தவறிய மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் மீண்டும் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பி.விஸ்வநாதன் இன்று அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2026-27ஆம் கல்வியாண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே 7ஆம் தேதி முதல் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த 181 கல்லூரிகளிலும் சேர்த்து மொத்தமாக 1,26,959 இடங்கள் (ஷிப்ட் 1-ல் 1,01,022 இடங்கள் மற்றும் ஷிப்ட் 2-ல் 25,937 இடங்கள்) உள்ள நிலையில், இதுவரை 2,24,034 விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. இந்நிலையில், பல்வேறு காரணங்களால் இதுவரை விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களுக்குப் புதிய வாய்ப்பை வழங்கும் நோக்கில், இரண்டு நாட்கள் இடைவெளிக்குப் பிறகு வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் மீண்டும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி தொடங்கப்பட உள்ளது.

மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளுக்கு www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக தடையின்றி விண்ணப்பிக்கலாம் என்றும், சேர்க்கை வழிகாட்டுதல் தொடர்பான முழு விவரங்களையும் இதே இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்றும் உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது. மேலும், சொந்தமாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வசதி இல்லாத மாணவர்களின் வசதிக்காக, அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre - AFC) அமைக்கப்பட்டு, அதன் மூலமாக விண்ணப்பிக்க சிறப்பு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோவை கொடூரம்..! சிறுமி கொலை வழக்கில் SIT கோரி வழக்கு..! ஹைகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்..!!
இந்த மாணவர் சேர்க்கை தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் உதவி மைய எண்களான 044-24343106 மற்றும் 24342911 ஆகிய தொலைபேசி எண்களைத் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்றும் அமைச்சர் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: TNPSC மூலம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.. அமைச்சர் சரத்குமார் உத்தரவு!