திருநெல்வேலி மாவட்டம் விக்ரமசிங்கபுரம் அருகிலுள்ள அடையக்கருங்குளம் பகுதியில் செயல்படும் செங்கல் சூளையில் வட மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். அங்கு பணிபுரியும் சூழலில் அவருக்கு பாலியல் தொல்லை வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்தனர். சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கு விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் மீது பாலியல் தொல்லை தொடர்பான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, தமிழகப் பெண்களுக்கும், தமிழகத்திற்கு வரும் பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத திமுக ஆட்சி நடந்து வருவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

செங்கல் சூளையில் வடமாநிலப் பெண் ஒருவருக்கு, சூளைக்குள் வைத்தே பாலியல் வன்கொடுமை கொடுத்த வழக்கில் இருவர் கைதாகியிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது என்று தெரிவித்தார். கடந்த ஐந்தாண்டுகால திமுக ஆட்சியில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகளும், கைதுகளும் தான் நாளுக்கு நாள் பெருகி வருகின்றனவே தவிர, குற்றங்கள் ஏனோ குறைந்தபாடில்லை என்று குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: இப்போதான் விசில் அடிக்க ஆரம்பிச்சிருக்கு.. நாங்க டிரம்ஸ் அடிப்போம்..!! நக்கலடித்த நயினார்..!!
அதிலும் குறிப்பாக திமுக ஆட்சியில் வடமாநிலப் பெண்கள் மீதும் வடமாநிலத் தொழிலாளர்கள் மீதும் தொடரும் வன்முறையானது, வரம்பின்றி நீண்டு கொண்டிருக்கிறது என்றும் பொதுவெளியில் கொஞ்சம் கூட தார்மீகப் பொறுப்பின்றி வட இந்தியர்களை வடக்கன், பானிபூரி விற்பவன், டேபிள் துடைப்பவன் எனத் திமுக தலைவர்கள் தொடர்ந்து இழிவாகப் பேசுவது தான் இதுபோன்ற குற்றச் சம்பவங்களுக்கான தூண்டுகோல் என்பதை ஆளும் தலைமை இன்னும் உணர்ந்து கொள்ளாதது அறியாமையின் உச்சம் எனவும் தெரிவித்தார்.
வேற்றுமையில் ஒற்றுமையைப் போற்றும் நமது பாரதத்தில், தமிழகத்தில் மட்டும் மற்ற மாநிலத்தவர்களை மாற்றாந்தாய் மனப்போக்குடன் அணுகும் திமுகவின் பிளவுவாத அரசியலுக்கு சமாதி கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் நயினார் நாகேந்திரன் கடுமையாக சாடியுள்ளார்.
இதையும் படிங்க: SAFETY FIRST..! பரவி வரும் பறவை காய்ச்சல்..! மக்கள் உஷாராக இருக்க நயினார் அறிவுறுத்தல்..!