திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலின் கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இடுக்கு பிள்ளையார் கோயில் பக்தர்களிடையே மிகுந்த பிரபலம் பெற்றது. இந்தக் கோயிலின் சிறப்பு என்னவென்றால், ஒரு குறுகலான குகை போன்ற துவாரம் வழியாக பக்தர்கள் உள்ளே சென்று வெளியே வர வேண்டும். இது பலரால் “மோக்ஷ மார்க்கம்” என்று அழைக்கப்படுகிறது. பக்தர்கள் படுத்தபடியே உள்ளே நுழைந்து, குறுகிய பாதையில் நகர்ந்து மறுபுறம் வெளியேறி, விநாயகரை வழிபடுவது வழக்கம். இந்த அமைப்பு ஆன்மீக நம்பிக்கையுடன் இணைக்கப்பட்டிருந்தாலும், உடல் பருமன் அதிகமுள்ளவர்களுக்கு இது ஆபத்தானதாக மாறியுள்ளது.
கோயிலின் இந்தக் குறுகிய துவாரம் உடல் எடை குறைவானவர்களுக்கு மட்டுமே பொருத்தமானது. உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள், மூச்சுத் திணறல் அல்லது இதயப் பிரச்சனை உள்ளவர்கள், முதியவர்கள் ஆகியோர் இந்தப் பாதையைத் தவிர்த்து வெளிப்புற மாற்று வழியில் வழிபடுமாறு கோயில் நிர்வாகம் மற்றும் சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஜூலை 24 அன்று இரவு சோகம் நிகழ்ந்தது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரி பகுதியைச் சேர்ந்த 36 வயதான மணிக்குமார் என்பவர் தனது குடும்பத்தினருடன் கிரிவலம் மேற்கொண்டார். இடுக்கு பிள்ளையாரை தரிசிக்க வந்த அவர், உடல் பருமன் காரணமாக குறுகிய துவாரத்திற்குள் நுழைந்தபோது நடுப்பகுதியில் சிக்கிக் கொண்டார். வெளியே வர முடியாமல் தவித்த அவருக்கு சிறிது நேரத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். சக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் போராட்டத்திற்குப் பிறகு அவரை வெளியே மீட்டனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதையும் படிங்க: தி.மலை இடுக்கு பிள்ளையார் கோவில்... பறிபோகும் உயிர்கள்..! உடல் பருமன் உள்ளவர்களுக்கு தடை..!

ஆனால், மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்தபோது ஏற்கெனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். மூச்சுத் திணறல் மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாகவே இந்த சோகம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. அடுத்த நாள் பெண் பக்தர் சிக்கிய சம்பவம்இந்த சோகம் நடந்த மறுநாள், ஜூலை 26 அன்று மீண்டும் அதே இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் பக்தர் இடுக்கு பிள்ளையார் கோயிலில் வழிபடுவதற்காக குறுகிய துவாரத்தின் வழியாக உள்ளே செல்ல முயன்றார். எதிர்பாராதவிதமாக நடுப்பகுதியில் அவரது உடல் சிக்கிக் கொண்டது.
பயத்தால் அவர் கூச்சலிட்டார். அருகில் இருந்த பக்தர்கள் உடனடியாக ஓடி வந்து, ஒருவர் அவரது கையைப் பிடித்து இழுத்து, மற்றவர்களின் உதவியுடன் பாதுகாப்பாக வெளியே மீட்டனர். அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் அந்தப் பெண் உயிர் தப்பினார். இது போன்ற சம்பவங்களை கருத்தில் கொண்டு இடுக்கு பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் முகப்பில், இரும்பு கம்பியால் சிறிய நுழைவாயில் அமைத்து கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன் பக்தர் ஒருவர் இக்கோயிலில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த நிலையில், கோயில் வாயில் மிகக்குறுகலாக உள்ளது என்பதனை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் மேகதாது பிரச்சனை..! மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு நோட்டீஸ்... மத்திய அரசுக்கு அழுத்தம்..!!