சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பல்கலைக்கழக மாணவி ஒருவர் கோட்டூர் புரம் காவல் நிலையத்தில் டிசம்பர் 24 ம் தேதி புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், ஞானசேகரனை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24 தேதி கைது செய்தனர்.

பின்னர் கோட்டூர்புரம் காவல்துறை விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி அண்ணாநகர் துணை ஆணையர் சினேகபிரியா, ஆவடி துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் துணை ஆணையர் ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் தேதி ஞானசேகரனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.
இதையும் படிங்க: வெள்ளைக்கொடியா? காவிக்கொடியா? இபிஎஸ் கேள்விக்கு மு.க.ஸ்டாலின் நச் பதில்..
இதனிடையே குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன் ஆளும் திமுக கட்சியை சேர்ந்தவர் என்னும் குற்றச்சாட்டு கிளம்ப, இந்த விவகாரம் தமிழக அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் புகார் சொன்ன மாணவி பாலியல் கொடுமை நடந்த அன்று ஞானசேகரன் வேறு ஒருவரிடம் போனில் பேசியதாகவும் அவரை சார் என அழைத்ததாகவும் புகாரில் சொன்னதாக தகவல் பரவ 'யார் அந்த சார்?’ என்னும் கேள்வியும் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கை விசாரணை செய்த சிறப்பு புலனாய்வு குழு, ஞானசேகரன் வீட்டில் ரெய்டு நடத்தியது. இதில் செல்போன், லேப்டாப் உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்களை கைப்பற்றப்பட்டன. புலன் விசாரணையில் திரட்டிய எல்லா தகவல்களையும் சேர்த்து கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டை 9ஆவது நீதிமன்ற நடுவர் நீதிமன்றத்தில் ஞானசேகரனுக்கு எதிராக 100 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை மார்ச் 7ஆம் தேதி சென்னை மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. தனக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை. எனவே தன்னை விடுவிக்க வேண்டும் என்று கோரி ஞானசேகரன் புதிய மனு தாக்கல் செய்தான். அதை விசாரித்து வந்த நீதிபதி, போலீஸ் வசம் போதிய ஆதாரங்கள் இருப்பதாக சொல்லி ஞானசேகரன் தாக்கல் செய்த மனுவை ஏப்ரல் 8ம் தேதி தள்ளுபடி செய்தார்.

அதே தினத்தில் ஞானசேகரனுக்கு எதிராக குற்றச்சாட்டுகளையும் பதிவு செய்தார். பாலியல் வன்கொடுமை, ஆதாரங்களை அழித்தல், பெண்ணை சட்ட விரோதமாக கட்டுப்பாட்டில் வைத்தல், நிர்வாணப்படுத்துதல், மிரட்டல் விடுத்தல், அந்தரங்க புகைப்படம் எடுத்து வெளியிடுதல், பெண் வன்கொடுமை சட்டம் உட்பட 12 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
ஏப்ரல் 23ம் தேதி சாட்சி விசாரணை துவங்கியது. தொடர்ந்து விசாரணை நடந்தது. போலீஸ் சார்பில் பாதிக்கப்பட்ட மாணவி உட்பட 29 பேர் நேரில் ஆஜராகி சாட்சி அளித்தனர். குற்றச்சாட்டுகளை நிரூபிக்க 75 ஆதாரங்களை போலீசார் தாக்கல் செய்தனர். சாட்சி விசாரணை, குறுக்கு விசாரணை முடிந்து மே 20ம் தேதி போலீஸ் தரப்பும், ஞானசேகரன் தரப்பும் இறுதி வாதங்களை முன் வைத்தனர்.

ஞானசேகரனுக்கு எதிரான எல்லா குற்றங்களும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளன. அறிவியல் ரீதியாகவும் நிரூபனம் ஆகி உள்ளது. ஞானசேகரன் தான் குற்றவாளி. எனவே அவருக்கு அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசு தரப்பு வக்கீல் மேரி ஜெயந்தி வாதிட்டார்.
அதே நேரம் ஞானசேகரன் தரப்பில் ஆஜரான வக்கீல், இது வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு. எந்த குற்றச்சாட்டுக்கும் ஆதாரம் இல்லை. எனவே ஞானசேகரனை விடுவிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ராஜலட்சுமி இன்று காலை 10:30 மணிக்கு தீர்ப்பு சொல்வதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார். இதனால் புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஞானசேகரன் சென்னை மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டான்.

தீர்ப்பின் இறுதி பகுதியை வாசித்த நீதிபதி ராஜலட்சுமி, ‛அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி’ என்று அறிவித்தார். மேலும் அவன் மீது பதிவு செய்யப்பட்ட 12 குற்றச்சாட்டுகளில் 11 குற்றச்சாட்டுகளை போலீசார் நிரூபித்து விட்டதாகவும் தெரிவித்தார். தீர்ப்பு விவரத்தை ஜூன் 2ம் தேதி அறிவிப்பதாக கூறினார்.

இந்த நிலையில் கோர்ட்டில் நடந்தது கூறித்து அரசு தரப்பில் வக்கீல் மேரி ஜெயந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் ஞானசேகரன் மீது பதிவு செய்யப்பட்ட 11 குற்றச்சாட்டுகளை போலீசார் நிரூபித்து விட்டதாகவும் தெரிவித்தார். வீட்டில் வயதான தாய் இருக்கிறார்.
அவருக்கு உடல் நலமும் சரி இல்லை. 8ம் வகுப்பு படிக்கும் மகள் இருக்கிறாள். இதை எல்லாம் கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என்று ஞானசேகரன் கோரினான். தனது வங்கி கணக்கை முடக்கி இருப்பதால் குடும்பம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதை சரி செய்ய வேண்டும் என்றும் கேட்டான்.

அதே நேரம் அவனுக்கு எந்த விதத்திலும் கருணை காட்டக்கூடாது; இது அரிதிலும் அரிதான வழக்கு; எனவே அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் வலியுறுத்தியதாக வக்கீல் மேரி ஜெயந்தி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எடப்பாடி இப்படி பண்ணுவாருனு நினைக்கல.. கொடநாடு வழக்கை சுட்டிக்காட்டி துரைமுருகன் கொடுத்த ட்விஸ்ட்..!