இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளது. இருநாடுகளும் மாறி மாறி வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றன. போரை நிறுத்திவிட்டு சரணடையுமாறு அமெரிக்கா அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தும், ஈரான் அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது. மாறாக, இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்தே தீருவோம் என்று அந்நாட்டின் மூத்த மத தலைவர் கமேனி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இருநாடுகளும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், பதற்றம் நீடித்து வருகிறது. இதனிடையே, ஈரான் மற்றும் இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஏற்கனவே அறிவுறுத்தியது.
இதையும் படிங்க: காமெனி உயிர்தான் குறி! ட்ரம்ப், நெதன்யாகு முதல் இஸ்ரேல் அமைச்சர் வரை ஓபன் ஸ்டேட்மெண்ட்..!
இந்நிலையில் இஸ்ரேல் - ஈரான் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு உடனடியாக அவர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் வழங்கிட தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் இஸ்ரேல் - ஈரான் இடையே தற்பொழுது ஏற்பட்டுள்ள போர் காரணமாக அந்நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையை அங்குள்ள தமிழர்களின் விவரங்களைப் பெற்று உடனடியாக அவர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் வழங்கிட ஆணையிட்டுள்ளார்.
இந்த சூழலில் ஈரான் நாட்டிலிருந்து இந்திய வெளியுறவுத்துறை மூலமாக இந்தியர்கள் தாயகம் திரும்பத் தொடங்கியுள்ளனர். இவர்களில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களை கண்டுபிடித்து தமிழ்நாட்டிற்கு பாதுகாப்பாக அழைத்து வரும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
மேலும், அங்குள்ள நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, தமிழர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்ய தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளது.

இதற்கென புது டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் 24x7 இயங்கும் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. உதவி எண்கள் பின்வருமாறு:
தொலைபேசி: 011 24193300 (Land line)
கைப்பேசி எண்: 9289516712 (Mobile Number with Whatsapp)
மின்னஞ்சல் : tnhouse@tn.gov.in, procofficetnh@gmail.com
அதுமட்டுமின்றி தமிழ்நாடு அரசின் சென்னையில் உள்ள அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்தில், செயல்பட்டுவரும் 24x7 கட்டணமில்லா உதவி எண்களை தொடர்புகொள்ளவும், தங்கள் பகுதியில் உள்ள இந்திய தூதரகம் வெளியிடும் அறிவுறுத்தல்களை பின்பற்றி பாதுகாப்பாக இருக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்தியாவிற்குள் - 1800 309 3793
வெளிநாடு: +91 8069009901 / 08069009901
+91 8069009900 / 08069009900 (Missed Call) மின்னஞ்சல் - nrtchennai@tn.gov.in / nrtchennai@gmail.com. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கொத்து கொத்தாய் வெடிக்கும் கிளஸ்டர் ஏவுகணை..! இஸ்ரேலை சூறையாட ஈரான் எடுத்த அதிரடி முடிவு..!