விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் குறித்து ஏர்போர்ட் மூர்த்தி சமூக வலைதளங்களில் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார். அண்மையில், சிதம்பரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் திருமாவளவனை ஒருமையில் பேசியதாக கூறப்படும் வீடியோ வெளியாகி, விசிக தொண்டர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலக வாசலில் ஏர்போர்ட் மூர்த்தியை விசிக ஆதரவாளர்கள் செருப்பால் தாக்கினர். இதற்கு பதிலடியாக, மூர்த்தி தன்னிடமிருந்த பாக்கெட் கத்தியால் விசிக நிர்வாகி திலீபனை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் திலீபனுக்கு கையில் காயம் ஏற்பட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 16 தையல்கள் போடப்பட்டன. இரு தரப்பினரும் மாறி மாறி புகார் அளித்த நிலையில், மெரினா காவல்துறையினர் விசிகவினர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இதையும் படிங்க: விசிக நிர்வாகி மீது தாக்குதல்.. இரவோடு இரவாக ஏர்போர்ட் மூர்த்தி அதிரடி கைது..!!
டிஜிபி அலுவலகம் முன்பாக நடந்த இந்த சம்பவம் தொடர்பாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் போன்ற பல அரசியல் தலைவர்கள் இந்தத் தாக்குதலைக் கண்டித்தார்கள். காவல்துறை தலைமை அலுவலகம் முன்பாகவே இப்படி ஒரு தாக்குதல் நடந்தது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதைக் காட்டுவதாக அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியிருந்தார்.
இதனையடுத்து சென்னை அடையாறில் உள்ள மூர்த்தியின் இல்லத்தில் இருந்து நேற்றிரவு காவல்துறையினர் அவரை கைது செய்தனர். கொடுங்காயம் ஏற்படுத்தும் வகையில் விசிகவினரை கத்தியால் தாக்கியதாக ஏர்போர்ட் மூர்த்தி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆபாசமாக பேசுதல், கொடுங்காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக, ஏர்போர்ட் மூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றம், அவருக்கு வரும் செப்டம்பர் 22ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டது. இந்த சம்பவம் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது. காவல்துறை மற்றும் அரசு மீது மூர்த்தி குற்றம்சாட்டியுள்ள நிலையில், இந்த வழக்கு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விசிக நிர்வாகி மீது தாக்குதல்.. இரவோடு இரவாக ஏர்போர்ட் மூர்த்தி அதிரடி கைது..!!