தஞ்சாவூர்: தஞ்சை மற்றும் டெல்டா மாவட்டங்களின் சம்பா சாகுபடிக்காக கல்லணையில் இருந்து இன்று காலை 11 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் டெல்டா பகுதிகளில் சாகுபடி பணிகள் வேகமெடுக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேட்டூர் அணையில் இருந்து கடந்த 1-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், அந்த தண்ணீர் காவிரி வழியாக திருச்சி மாவட்டம் முக்கொம்பு அணையை கடந்து நேற்று காலை கல்லணையை வந்தடைந்தது. ஆரம்பத்தில் தண்ணீர் குறைந்த அளவில் வந்ததால் கல்லணையில் நீர்மட்டம் முழுமையாக உயரவில்லை. இதனால் காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளின் மதகுகளின் அருகே தண்ணீர் தேங்கி இருந்தது.
இந்த நிலையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கு தேவையான நீரை வழங்கும் வகையில் கல்லணையில் இருந்து இன்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் வேளாண்துறை அமைச்சர் வினோத் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் ஆகியோர் கலந்து கொண்டு பாசன நீரை திறந்து வைத்தனர்.
இதையும் படிங்க: “தினமும் 1 டிஎம்சி திறங்க!” கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு அதிரடி பரிந்துரை

இதையொட்டி டெல்டா மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், மாவட்ட கலெக்டர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு மற்றும் கல்லணை கால்வாய் வழியாக தண்ணீர் செல்கிறது.
இந்த நீர் திறப்பின் மூலம் டெல்டா மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பா பருவ சாகுபடிக்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு இந்த தண்ணீர் திறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் தற்போது கல்லணையை வந்தடைந்து, அங்கிருந்து டெல்டா பாசன பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீர்வரத்து மற்றும் பாசன தேவையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.
சம்பா சாகுபடி தொடங்க உள்ள நிலையில் கல்லணையில் இருந்து பாசன நீர் திறக்கப்பட்டிருப்பது, டெல்டா விவசாயிகளுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: காவிரி நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவோம்! கடைமடை வரை பகிர்ந்தளிப்போம்! முதல்வர் விஜய் வேண்டுகோள்!