நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் தமிழகத்திற்கு, 18 எம்.பி.,க்கள் உள்ளனர். இதில், தலா ஆறு இடங்களுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, சுழற்சி அடிப்படையில் தேர்தல் நடக்கிறது. யாராவது ராஜினாமா செய்தால் அல்லது மரணம் அடைந்தால், அந்த இடத்துக்கு தனியாக தேர்தல் நடத்தப்படும். தி.மு.க.,வின் அப்துல்லா, வில்சன், சண்முகம், அ.தி.மு.க.,வின் சந்திரசேகரன், பா.ம.க.,வின் அன்புமணி, ம.தி.மு.க.,வின் வைகோ ஆகியோர் பதவிக்காலம் ஜூலை 24ல் முடிகிறது.
அதற்கு முன் அந்த இடங்களுக்கு, புதிய உறுப்பினர்களை தேர்வு செய்தாக வேண்டும். அதற்கான தேர்தல் ஜூன் 19ல் நடக்கும் என, தேர்தல் கமிஷன் அறிவித்தது. தமிழகத்திலிருந்து ஒருவர் ராஜ்யசபா உறுப்பினராவதற்கு, 34 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு தேவை. தி.மு.க., கூட்டணியில், 159 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளதால், அக்கட்சிக்கு நான்கு எம்.பி.,க்கள் கிடைப்பர்.
அ.தி.மு.க., கூட்டணியில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் மூன்று பேரையும், பா.ஜ.,வின் நான்கு பேரையும் சேர்த்தால், 70 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இந்த கூட்டணிக்கு, இரு எம்.பி.,க்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, ஓட்டுப்பதிவு இல்லாமலே முடிவு அறிவிக்க இயலும்.
இதையும் படிங்க: ஞானசேகரன் வழக்கில் கோர்ட்டில் நடந்தது இதுதான்.. அரசு தரப்பு வக்கீல் அளித்த புதிய தகவல்கள்..

இந்த நிலையில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் காலியாக உள்ள உறுப்பினர் பதவிக்கான வேட்பாளர்களை திமுக அறிவித்துள்ளது. அதன்படி, அக்கட்சி சார்பில் தற்போது எம்.பி., ஆக உள்ள வில்சனிற்கு மட்டுமே மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இவர் அண்மையில் ஆளுநருக்கு எதிரான வழக்கில் திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வாதாடி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம், தொமுச பேரவைத் தலைவர் சண்முகம், எம்.எம்.அப்துல்லா ஆகியோர் மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக புதியதாக எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் கவிஞர் சல்மா ஆகியோரை வேட்பாளர்களாக திமுக தலைமை அறிவித்துள்ளது. சேலம் திமுக கிழக்கு மாவட்ட செயலாளரான எஸ்.ஆர்.சிவலிங்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமானராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கூட்டணியில் உள்ள மதிமுக தலைவர் வைகோவிற்கு இந்த மாநிலங்களை உறுப்பினர் பதவி ஒதுக்கப்படவில்லை. அதற்கு மாறாக, நாடாளுமன்ற தேர்தலில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின்படி, மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக (மதிமுக) தலைவர் வைகோவுக்கு இந்த மாநிலங்களவைத் தேர்தலில் வேட்பாளர் இடம் வழங்கப்படவில்லை. திமுக கூட்டணியில் மதிமுக முக்கிய பங்கு வகித்து வந்தாலும், அவருக்கு சீட் வழங்கப்படவில்லை என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாதது, கட்சி தொண்டர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தினாலும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிட திமுக வாய்ப்பளிக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் நாடாளுமன்றத்திற்கு உள்ளே மட்டுமல்ல எப்போதும் மக்களின் குரலாக வைகோ ஒலிப்பார் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தொடர்வோம் என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சார்பில் ஒவ்வொரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்தெடுக்கவும் 34 எம்.எல்.ஏக்களின் ஆதரவு அவசியம். தற்போது திமுக கூட்டணிக்கு மொத்தம் 159 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளது. இதன் மூலம் காலியாக உள்ள 6 இடங்களில் 4 இடங்களை திமுக எளிதில் கைப்பற்றும். மறுமுனையில் அதிமுக கூட்டணிக்கு மொத்தம் 75 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இதனால், அக்கட்சி இரண்டு உறுப்பினர்களை பெறும். அதற்கான போட்டியாளர்கள் யார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அன்புமணி மீண்டும் அதிமுக கூட்டணியில் இணைந்து பதவியை பெறுவாரா? அல்லது நாடாளுமன்ற தேர்தலின்போது ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி தேமுதிகவிற்கு ஒரு சீட் ஒதுக்கப்படுமா? என்பது இன்னும் விடையில்லா கேள்விகளாகவே தொடர்கின்றன.
இதையும் படிங்க: வெள்ளைக்கொடியா? காவிக்கொடியா? இபிஎஸ் கேள்விக்கு மு.க.ஸ்டாலின் நச் பதில்..