தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலைகள் பல ஆண்டுகளாக சமூகத்தில் பெரும் பிரச்சனையாக உள்ளன. இவை பெரும்பாலும் சாதி, மதம், குடும்ப மானம் போன்றவற்றை முன்னிறுத்தி நிகழ்த்தப்படும் வன்முறை. இந்தப் பின்னணியில், கவின் என்ற இளைஞரின் ஆணவப் படுகொலை விவகாரம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கவின்குமார். இவர் சென்னையில் தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், விடுமுறைக்குச் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அப்போது, தனது தாத்தாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நெல்லை கேடிசி நகர் பகுதியில் உள்ள சித்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளதாக தெரிகிறது.
சிகிச்சை முடிந்து, சொந்த ஊருக்குச் செல்வதற்காக இருவரும் சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தபோது, அவர்களை வழிமறித்த இளைஞர் அரிவாளை எடுத்து கவின்குமாரை வெட்ட துணிந்துள்ளார்.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் அஜித்குமார் கொலை வழக்கு.. தீவிரமாகும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை..!!

அவரிடம் இருந்து தப்ப முயன்ற கவின், உயிரை கையில் பிடித்து ஓடியுள்ளார். இருப்பினும் கவினை அந்த இளைஞர் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துள்ளார்.
இதை அடுத்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தது சுர்ஜித் என்ற இளைஞர் கவின்குமாரை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. தன் சகோதரி உடன் நெருங்கி பழகியதால் ஆத்திரத்தில் இவ்வாறு செய்ததாகவும் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இவ்வாறு செய்ததாகவும் அந்த இளைஞர் சுர்ஜித் வாக்குமூலம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தன் மகனுக்கு நேர்ந்தது ஆணவ படுகொலை என்றும் உரிய நீதி கிடைக்க வேண்டும் எனவும் கவினின் தந்தை வேதனையுடன் தெரிவித்தார். தன் மகன் எந்த விதத்திலும் குறைந்தவன் கிடையாது என்றும் நன்றாக படித்து சம்பாதித்து வந்ததாகவும் கூறினார்.
அந்தப் பெண்தான் மருத்துவமனைக்கு வருமாறு அழைத்ததாகவும், அவரது சகோதரர் தன்மகனை வழிமறித்து கண்களில் மிளகாய் பொடி தூவி வெட்டியதாகவும் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர்களாக உள்ள சுர்ஜினின் தாய் மற்றும் தந்தையை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் தனது மகனின் உடலை வாங்க மாட்டோம் எனவும் தங்கள் போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கு.. 5 போலீசாருக்கு காவல் நீட்டிப்பு..!