மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தில் திசுப் பொறியியல் பிரிவில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வரும் மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த பட்டியலின மாணவர் பாரதிதாசனுக்கு தமிழ்நாடு அரசு வழங்க வேண்டிய ரூ.21 லட்சம் நிலுவை உதவித்தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும், இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் பயிலத் தேர்வாகியுள்ள 316 தமிழக மாணவர்களுக்கு விசா கிடைத்திட ஒன்றிய அரசு மூலமாக அந்நாட்டுத் தூதரகத்தை வலியுறுத்த வேண்டும் எனவும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், தமிழ்நாடு அரசின் டாக்டர் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு, மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறையில் திசுப் பொறியியல் மற்றும் மீள் உருவாக்க மருத்துவப் பிரிவில் இரண்டாம் ஆண்டு பி.எச்.டி படித்து வரும் உசிலம்பட்டி மாணவர் பாரதிதாசன், தமக்கு நடப்பு ஆண்டுக்கான உதவித்தொகை வரவில்லை எனப் பதிவிட்டிருந்தார்.

நடப்பாண்டிற்குரிய ரூ.36 லட்சத்தில் ரூ.11 லட்சம் விடுவிக்கப்பட்ட நிலையில், ஆய்வைத் தொடரத் தேவையான மீதமுள்ள ரூ.21 லட்சம் தொகையைத் தமிழ்நாடு அரசு இன்னும் விடுவிக்கவில்லை. கடந்த ஆண்டின் செலவுக் கணக்குகள், ரசீதுகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் தரநிலை அறிக்கைகளை மாணவர் ஜூன் மாதமே சமர்ப்பித்துவிட்ட போதிலும், தற்போது புதிதாகப் பல்கலைக்கழகப் பதிவாளர் அலுவலகத்தில் ரசீதுகளுக்கு சீல் பெற்று அனுப்ப வேண்டும் எனக் கூறி காலதாமதம் செய்வது நியாயமற்றது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படிங்க: மின்துறை தனியார்மயத்தை கைவிடுக! திருப்பூரில் மின் ஊழியர் மத்திய அமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம்!
இப்பிரச்சினையால் மாணவரின் கல்வி இடைநிறுத்தப்படும் அபாயம் எழுந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், அரசு தரவேண்டிய தொகையை நம்பி அயல்நாட்டில் பயிலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு மாணவரை இப்படி அலைக்கழிப்பது அரசுக்கு அழகல்ல.
சமூகநீதித் துறை எனப் பெயர் மாற்றப்பட்டுள்ள ஆதிதிராவிடர் நலத்துறை தனது கடமையிலிருந்து வழுவக் கூடாது. அத்துறையின் அமைச்சர் தோழர் வன்னிஅரசு சமூகநீதிப் பின்னணியில் இருந்து வந்தவர் என்ற உரிமையுடன், மாணவருக்கு உரிய உதவித்தொகையைத் தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இங்கிலாந்து கல்வி விவகாரம் குறித்துக் குரல் எழுப்பியுள்ள ஆசிரியர் கி.வீரமணி, இவ்வாண்டு அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித்தொகைக்குத் தேர்வான 316 மாணவர்களுக்கு, 'மாநில அரசின் நிதி உத்தரவாதத்தை ஏற்க முடியாது; ஒன்றிய அரசின் உத்தரவாதத்தையே ஏற்க முடியும்' என்று கூறி அந்நாடு விசா மறுத்து வருவது வேதனையளிக்கிறது.
தனியார் வங்கிகளின் உத்தரவாதத்தை ஏற்கும் இங்கிலாந்து, ஒரு மாநில அரசின் திட்டத்தை நிராகரிப்பது ஏன்? இம்மாணவர்களுக்கு விசா கிடைத்திட தமிழ்நாடு அரசு ஒன்றிய வெளியுறவுத் துறை மூலம் இங்கிலாந்து உயர் ஆணையரகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாகத் தீர்வு காண வேண்டும்.
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், நீதிக்கட்சி தலைவர்கள் பெற்றுத் தந்த சமூகநீதிக் கனவை நனவாக்கும் வகையில், முதல் தலைமுறை மாணவர்களின் வெளிநாட்டுக் கல்வித் தடைகளை உடைத்தெறிந்து தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் உதவ வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா? ஐகோர்ட் கேள்வி!