விருதுநகர் மாவட்டம் சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், மற்றும் கோவில்பட்டி, சங்கரன்கோவில் பகுதிகளில் ஆயிரக்கணக்கான சிறிய மற்றும் பெரிய பட்டாசு தீப்பெட்டி ஆலைகள் செயல்படுகின்றன. குறிப்பாக சிவகாசி இந்தியாவின் பட்டாசு உற்பத்தியில் முதன்மையான பங்கு வகிக்கிறது. இந்தியாவில் உற்பத்தியாகும் பட்டாசுகளில் 90% சிவகாசியில் தயாரிக்கப்படுகிறது, இதனால் இந்நகரம் இந்தியாவின் பட்டாசு தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பட்டாசு ஆலைகள் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்கள் பணிபுரிகின்றார்கள் பட்டாசுத் தொழிலில் ஆபத்தான வெடி மருந்துப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதால் பல கட்டுப்பாடுகள் உண்டு.

இந்த சிறிய அறைகளை 10 லட்சம் வரையில் குத்தகைக்கு எடுத்து தொழில் செய்யும் சிறிய தொழில் முனைவோரால் குந்தவைக்குக் கொடுத்த ரூ பத்து லட்சத்தைத் திரும்ப எப்படியாவது எடுத்தாக வேண்டும் என்பதால் விதிமுறைகளை மீறி பயிற்சி அற்றவர்களையும், 4 பேர் பணிபுரிய வேண்டிய அறையில் 20 பேர் வரையும் இத்தொழிலில் ஈடுபடுத்துகிறார்கள். பயிற்சி அற்றவர்கள் செய்யும் தவறுகளும், சிறிய அறைகளில் பன்மடங்கு பணியாளர்கள் பணி செய்வதும் எளிதாக விபத்து ஏற்படுவதற்கும், உயிரிழப்புகள் ஏற்படுவதற்கும் காரணமாகி விடுகிறது. இதன் தொடர்ச்சியாகவே கடந்த வாரம் சின்னக் காமன்பட்டியில் ஏற்பட்ட விபத்தில் பத்து பேர் இறந்துள்ளனர்; இன்று ஏற்பட்ட விபத்தில் பட்டாசு ஆலையில் உள்ள 32 அறைகள் தரைமட்டமாகி உள்ளது மற்றும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து.. நிவாரணம் அறிவித்தார் முதல்வர் மு.க ஸ்டாலின்..!

சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து நடக்கிறது; அதனால் உயிரிழப்புகள் தொடர் நிகழ்வுகள் ஆகின்றன. இதனால் சிவகாசி நவீனக் கொலைக்களமா என்ற கேள்வி எழுவதாக தெரிவித்துள்ளார். பட்டாசு ஆலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தற்போது வரையிலும் முறையான இழப்பீடுகள் வழங்கப்படாமல் பல இழுத்தடிப்புகளுக்குப் பிறகு ஒரு சில லட்சங்கள் பெறுவதே மிகக் கடினமாக உள்ளது என்றும் உலகின் பல பகுதிகளிலும் பட்டாசு ஆலைகள் உண்டு. அந்நாடுகளில் சட்ட விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுவதால் விபத்துக்கள் தடுக்கப்படுகின்றன. ஆனால், நமது தேசத்தில் தொழிலாளர்களைப் பாதுகாக்க விதிமுறைகளை அமலாக்க வேண்டிய மத்திய, மாநில அரசுத் துறை அதிகாரிகள் ஊழலில் ஊறித் திளைப்பதால் முறையான கண்காணிப்புகள் இல்லாமல் போய் விடுவதாக கூறினார்.

எனவே இனிமேல் இது போன்ற விபத்துக்களைத் தடுக்க விதிமுறைகள் அமலாக்காத அதிகாரிகளைப் பொறுப்பாக்கி, கைது செய்து அவர்கள் தண்டிக்கப்பட்டால் தான் சிவகாசி பகுதிகளில் தொழிலாளர்களும் பாதுகாக்கப்படுவார்கள்., பட்டாசுத் தொழில்களும் பாதுகாக்கப்படும் என்றும் இன்று பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த பாலகுருசாமி என்பவரின் குடும்பத்திற்கு குறைந்தது ரூ 25 லட்சம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: சிவகாசி: பட்டாசு ஆலையில் பயங்கர சத்தம்.. வெடித்து சிதறிய அறைகள்.. 7 பேர் பரிதாப பலி..!