ராணுவ வீரர்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை முதல்வர் மு.க.ஸ்டாலின் கோமாளி என விமர்சித்திருந்தார். அதற்கு பதிலடி தரும் வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நவீன கோமாளி என்றும், அமைச்சர் ரகுபதிஐ கொத்தடிமை என்றும் சகட்டுமேனிக்கு விமர்சித்துள்ளார்.
நவீன கோமாளி:
தமிழ் நாட்டில் என்ன நடக்கிறது என்பதே கொஞ்சம் கூட தெரியாமல், கடந்த நான்கு ஆண்டுகள் இம்சை அரசன் புலிகேசி தர்பார் நடத்தி வரும் நவீன கோமாளி மன்னன் ஸ்டாலினின் ஆஸ்தான கூவல் கொத்தடிமை ரகுபதி, இத்தனை ஆண்டுகள் முட்டுக் கொடுத்து கொடுத்து. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களிடம் வாங்கிய தர்ம அடிகளுக்கெல்லாம் பரிசாக இப்போதுதான் கனிமவளக் கொள்ளையடிக்க லைசன்ஸ் கொடுக்கும் விதமாக, அமைச்சர் இலாகா கொடுத்துள்ளார் பொம்மை முதலமைச்சர். அந்த உற்சாகத்தில் பலத்த முட்டுகளுடன் நேற்று (14.5.2025). ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மே 24ல் முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்..! தமிழ்நாட்டுக்கான நிதி விவகாரங்கள் எதிரொலிக்கும் என எதிர்பார்ப்பு..!
யார் இந்த ரகுபதி ? இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் கைகாட்டவில்லை என்றால், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் வியர்வையும், ரத்தமும் சிந்தி உழைக்கவில்லை என்றால், இவர் எங்கு இருந்திருப்பார்? இவருக்கு அரசியல் வாழ்வளித்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களின் உழைப்பை உறிஞ்சி, உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்யும் ஒட்டுண்ணியைவிடக் கேவலமானவர் தானே இந்த ரகுபதி?

தமிழ் நாட்டில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது; பெண்களின் பாதுகாப்பு பாதாளத்தில் உள்ளது; போதைப் பொருள் புழக்கம் அமோகமாக உள்ளது. மொத்தத்தில் கும்பி எரியுது, குடல் கருகுது, குளு குளு ஊட்டி போட்டோ ஷூட் கேட்கிறதா? என்று நவீன கோமாளி ஸ்டாலினிடம் கேட்டுச் சொல்லுங்கள் மிஸ்டர் ரகுபதி.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில், நடுநிலையான விசாரணை வேண்டும் என்று வழக்கை CBI-க்கு மாற்றி உத்தரவிட்டார் அன்றைய தமிழ் நாடு முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள். விடியா திமுக ஆட்சியில் நடைபெற்ற, அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் ஞானசேகரனுக்கும் திமுக-வுக்கும் சம்மந்தமே இல்லை என்று பச்சைப் பொய் பேசியவர் தானே இந்த ரகுபதி ? இந்த ரகுபதியின் பொய்யால் சட்டப் பேரவையில் திரு. ஸ்டாலினே, ஞானசேகரன் திமுக பொறுப்பாளர் அல்ல, அனுதாபி என உருட்ட வேண்டிய நிலைக்குத் தானே தள்ளப்பட்டார்.
காரி துப்பிய நடவடிக்கை:
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் FIR லீக் ஆனதற்கு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 25 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்கச் சொல்லி, சென்னை உயர்நீதிமன்றம் ஸ்டாலின் அரசின் நடவடிக்கைகளை காரித் துப்பியதே, இதெல்லாம் மறந்துபோச்சா ரகுபதி? உங்கள் முதலமைச்சர் நவீன கோமாளி ஸ்டாலினைப் போன்றே, உங்களுக்கும் ஞாபக மறதியா?
கோடநாடு வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்து, Charge Sheet போட்டது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு. கேரளா குற்றவாளிகளுக்கு வாதாடி ஜாமீன்தாரராக இருந்தது திமுக-வினர்.

கோடநாடு வழக்கை விரைவில் முடியுங்கள் என்று தானே, எங்கள் கழகப் பொதுச் செயலாளர் ‘புரட்சித் தமிழர்' மாண்புமிகு எடப்பாடியார் அவர்களும் சொல்லி இருக்கிறார்? நான்கு ஆண்டுகளாக கோடநாடு வழக்கை விசாரித்து முடிக்க வக்கில்லாத நவீன கோமாளி ஸ்டாலினின் கொத்தடிமை ரகுபதிக்கு இது ஏன் புரியவில்லை?
முக்கி முக்கி வராத நிதி, 'புரட்சித் தமிழர்' மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் மாண்புமிகு அமித் ஷா அவர்களை சந்தித்துப் பேசியதும் வந்துவிட்டது என்ற கடுப்பு இருக்கத் தானே செய்யும்?
ஒட்டுண்ணி ரகுபதி:
திமுக நடத்திய போராட்டக் காமெடி நாடகத்தை நம்பி, மத்திய அரசு நிதி கொடுத்தது என ஒட்டுண்ணி ரகுபதி சொல்வாரானால், அது செக்கில் ஆட்டிய சுத்தமான உருட்டு!
இப்படித் தான், 7.5% இடஒதுக்கீடு வந்தபோது, ஆளுநர் மாளிகை முன்பு கோமாளி ஸ்டாலின் அவியல் கிண்டியதால் தான் வந்தது என்று ஒரு உருட்டு உருட்டினர் திமுக கொத்தடிமைகள். அந்த உருட்டை ஸ்டாலினின் பேரன் கூட நம்பமாட்டான்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தால் அரசியல் அடையாளம் பெற்று, அஇஅதிமுக-வில் கொள்ளையடிப்பவர்களுக்கு இடமில்லை என்று தெரிந்ததும், கொள்ளையர்களின் கூடாரமான திமுக-வுக்குச் சென்று கொள்ளையிலே குளியல் போட்ட ரகுபதி உள்ளிட்ட ஊழல் பெருச்சாளிகள் வேண்டுமானால் ரெய்டுக்கெல்லாம் பயப்படலாம்.
ரெய்டுக்கு பயந்து அஞ்சியதில்லை:
மக்களோடு மக்களாக நின்று, மக்களுக்கான அரசியலைச் செய்யும், எங்கள் கழகப் பொதுச் செயலாளர் 'புரட்சித் தமிழர்' மாண்புமிகு எடப்பாடியார் அவர்களுக்கு மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. நாங்கள் யாரும் ஒருபோதும் எந்த ரெய்டுக்கும் அஞ்சியதில்லை; அஞ்சப்போவதும் இல்லை.
1991-ல் சட்டமன்ற உறுப்பினரானபோது ரகுபதியின் சொத்து மதிப்பு என்ன? அதே ரகுபதியின் இன்றைய சொத்து மதிப்பு என்ன? எத்தனை கல்லூரிகள் வைத்துள்ளார்? பினாமி பெயர்களில் எத்தனை கல்லூரிகள் வைத்துள்ளார் ? இப்படி எண்ணிலடங்கா சொத்துக்களை வாரிக் குவித்த ரகுபதி தான், நாளை காலை ரெய்டு வந்துவிடுமோ? என்ற பயத்திலேயே தினந்தோறும் இரவுகளைக் கழிக்க வேண்டும்.

அறிவாலயத்தில், மேலே ரெய்டுக்கு பயந்து, கீழே கட்சியை காங்கிரசுக்கு அடமானம் வைத்த கருணாநிதி குடும்பத்தின் கொத்தடிமைகள், மாநில உரிமைகள் பற்றி பாடமெடுக்க துளியும் தகுதியற்றவர்கள்.
எவ்வளவு மேக்கப் போட்டாலும், எத்தனை போட்டோ ஷூட் நடத்தினாலும் கோமாளி ஸ்டாலினால் இனி மக்களை ஏமாற்ற முடியாது. 2026-க்குப் பிறகு சட்டையைக் கிழித்துக் கொண்டு ஸ்டாலினும், திமுக-வும் Back to Form (அதான், பூனை மேல் மதில்) வருவது உறுதி! உறுதி! உறுதி!
இதையும் படிங்க: மற்ற மாநில முதல்வர்களுடன் ஆலோசனை! ஜனாதிபதி விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை..!