இந்தியாவில் வங்கிகளுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி ரிசர்வ் வங்கியில் இருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில், தங்க நகைக்கடனில் முறைகேடு நடப்பதாகவும் தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் பெறுவதில் ஒழுங்கற்ற நடைமுறைகள் பின்பற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தங்க நகைக்கடன் வழங்குவதில் வங்கிகளுக்கான புதிய வரைவு விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது. மேலும் நகைக்கடனில் முறைகேடு நடப்பதை தடுக்கும் வகையில் நகை வாங்கிய ரசீதைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட புதிய விதிகள் கொண்டு வரப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வங்கிகளில் நகைகளை அடகு வைப்பவர்கள், ஆண்டுதோறும் வட்டியை மட்டுமே செலுத்தி, மறு அடகு வைக்கலாம் என்றிருந்த நிலையை மாற்றி, அசலுடன் வட்டியையும் சேர்த்து செலுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டு நெறிமுறையைக் கொண்டு வந்துள்ளது. இந்த புதிய விதிமுறைகளுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி கொண்டு வரும் நகைக் கடன் தொடர்பான கட்டுப்பாடுகள் தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது என கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டப்பேரவையில் கூட்டுறவுத்துறை சார்பில் 49 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. தற்போது அதன் நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டது. 8 ஆயிரம் சதுர அடியில் தீவுத்திடல் அருகே புதிய கட்டிடம் கட்டவும், அதில் கூட்டுறவு வங்கி மற்றும் நியாய விலை கடை ஆகியவை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புதிய நகைக்கடன் நெறிமுறைகள் விவசாயிகளை வஞ்சிக்கும்! நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் கடிதம்...

மேலும் 110000 கோடி ரூபாய் வங்கி பரிவர்த்தனை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு பயிர்க்கடன் மட்டும் அல்லாமல் புதிய கால்நடைகள் வாங்க கடன் அதிக அளவில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பயனாளர்களுக்கு பயிர்க்கடன் வழங்க 17000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளால் ஏழை எளிய மக்கள் நடுத்தர வர்கத்தினருக்கு பாதிப்புதான். ஆனால் மாநில கூட்டுறவு வங்கிகளை பாதிக்காது. விலை மதிப்பில் மார்கெட் நிலவரத்தை பொறுத்து 75 சதவிகிதம் தான் கடன் கொடுக்கப்படும் என்று ஆர்.பி.ஐ சொல்கிறது.

அந்தளவுதான் நாம் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். தொடக்க வேளாண்மை கடன் வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் வருவது இல்லை. அதனால் ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய வரைவு விதிகள் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது. ஆனால் ஏழை, எளிய மக்கள் அவசர தேவைக்காக பாட்டன் பூட்டன் வாங்கிய நகையை வைத்து பணம் வாங்கச் சென்றால் அதற்கான ரசீது கேட்டால் எப்படி கொடுக்க முடியும். அதனால் தான் முதல்வர் ஸ்டாலின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: புதிய நகைக்கடன் நெறிமுறைகள் விவசாயிகளை வஞ்சிக்கும்! நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் கடிதம்...